ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ ஹாசிம் மூசா என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பயங்கரவாதி ஹாசிம் மூசா பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப்படை பிரிவான எஸ்.எஸ்.ஜி.,யை சேர்ந்தவன். ஹாசிம் மூசாவை லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருக்கலாம் என்ற உளவு அமைப்பு விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதி ஹாசிம் மூசா காஷ்மீரில் நடந்த 3 பயங்கரவாத தாக்குதல்களில் பங்கேற்றுள்ளான் என்று விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
