வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச நாளான இன்று முல்லைத்தீவு பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி, மாவட்ட செயலகம் முன்பாக சென்றடைந்து அங்கு போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்திற்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்ட உறுவுகளை தேடி உயிரிழந்த பெற்றோர்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
கொடிய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும், சர்வதேச நீதி வேண்டும், காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டும், கலப்புப் பொறிமுறை வெறும் கண்துடைப்பு, போன்ற பதாதைகளை தாங்கியவாறு மாவட்ட செயலகம் வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவைகருதி இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை வாசிக்கப்பட்டது.