சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
சிலருக்கு சில விஷயங்களில் ஒவ்வாமை ஏற்படும். பொதுவாக ஒவ்வாமைக்கான காரணத்தை அறியாமலேயே அதைக் கண்டு விலகி ஓடுபவர்களே அதிகம் என்று அமெரிக்காவில் நடந்த பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் அதிகாரப் பரவலாக்கம் என்பதற்கு ஒரு அடிப்படையாக இருக்கக் கூடும் என்று கருதப்பட்டு அதற்கு அமைவாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டதே இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது சட்டத் திருத்தம். அது இன்றளவும் பலருக்கு ஒவ்வாமையாகவுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதற்குப் பல காரணிகள் பின்புலமாக இருந்தன. இலங்கையை மையப்படுத்தி அமெரிக்கா எடுத்த சில முன்னெடுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழர்களுடைய உரிமைகளைப் பெற்றிட அரசியல் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய நேரத்தில் இந்தியா ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளித்து, போராளி இயக்கங்களுக்கு அனைத்து வகையிலும் உதவிகளைச் செய்தது.
ஜேஆர் ஜெயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்ததால் அவரால் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியுடன் இணைந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிந்தது. அதற்கு அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. முக்கியமாக ஜே ஆர் அரசில் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச இதை மிகவும் கடுமையாக எதிர்த்தார். பின்னர் அவர் ஜனாதிபதியான போது `எங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்கிறோம்` என்று கூறி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்தது, இலங்கையில் நிலை கொண்டிருந்த `இந்திய அமைதி காக்கும் படையினரை` 1989 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து வெளியேற்றியது, அதையடுத்து இந்திய இலங்கை உறவுகளில் கணிசமான பின்னடைவு ஏற்பட்டது, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது, அது போராளிக் குழுக்கள் குறிப்பாக விடுதலைப் புலிகளின் செயல்பாட்டின் மீது ஏற்படுத்திய தாக்கம், அந்த அமைப்பு பல நாடுகளில் தடை செய்யப்பட்டது என்பதெல்லாம் காலத்தால் அழியாத வரலாற்றின் கசப்பான பக்கங்கள்.
இன்று 13 ஆவது சட்டத்திருத்தம் பெரும் விவாதப் பொருளாக மீண்டும் மாறியுள்ளது. தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் ஒன்று கூடி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் கூட்டு அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட அந்தச் செயல்பாடு குழப்பியடிக்கப்பட்டது. பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வேறுசில கட்சிகள் 13 ஆவது சட்டத்தித்ருத்தை அமல் செய்யக் கோரியும் அதை மேலும் வலுப்படுத்தி அதிகாரப் பரவலாகத்தை விரிவடைய இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்று கோரும் கடிதம் இந்திய தூதர் மூலம் புதுடில்லிக்கு அனுப்பப்பட்டது ஆகியவை அண்மையில் நிகழ்ந்தேறின.
இதேவேளை 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது, அவர்களது அபிலாஷைகளுக்கு விரோதமானது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியது. இதில் ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் பங்குபெற்றனர் என்று அந்தக் கட்சி கூறியது.
அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கம் மூலம் தமிழ் மக்களை ஒரே தளத்தில் கொண்டுவந்து இணைத்து அவர்களது அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வை முன்னேற்ற 13 வழி செய்யும் என்பது பொதுவான புரிதலாக இருந்தது. அது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே, குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையாகவே இருந்துள்ளது.
13 வேண்டவே வேண்டாம் என்று கூறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், அது முழுமையான தீர்வாகாது என்றாலும் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று வாதிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே மக்கள் நலன் என்பதைவிட அரசியல் பகைமையே மேலோங்கி நிற்கிறது என்கிற மிகக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இது சுயநல அரசியலையே காட்டுகிறது என்று தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இதேவேளைதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 13 எதிர்ப்பிற்குப் பின்னணியில் ஆளும் ராஜபக்ச அரசு உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அதற்கு அடிப்படையாக சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லை, இலங்கையில் ஒற்றையாட்சி என்பதே எமது நிலைப்பாடு என்று கொழும்பு ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். அதாவது 13 என்பது ஒழிக்கப்பட வேண்டும், அதுவே சமஷ்டி என்கிற பேச்சிற்கு அடித்தளமாக உள்ளது என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இப்போது 13 ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி த தே ம மு யாழில் போராட்டத்தை நடத்தியுள்ளது. அண்மைக் காலத்தில் தமிழர்கள் எந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தாலும் அதற்கு நீதிமன்ற தடையைப் பெறுவது வாடிக்கையாகியுள்ளது. உதாரணமாக திலீபன் நினைவுநாள் அனுசரிப்பு, மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுப்பு, பி 2 பி பேரணி போன்றவற்றின் போது தமிழர் தாயகப் பகுதிகளில் பல இடங்களில் அதற்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டது. விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சி, கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை என்று கூறி பொலிசார் தடையாணைகளைப் பெற்றதை தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே நேரம், அப்படியான தடை உத்தரவு ஏன் 13க்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆரப்பாட்டத்திற்குப் பெறப்படவில்லை என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
ரணசிங்க பிரேமதாஸ விடுதலைப் புலிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒரு புரிந்துணர்வைப் போன்று, ராஜபக்ச அரசாங்கம் 13 ஐ ஒழிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஒரு மறைமுக உடன்பாட்டைச் செய்துள்ளனர் என்று அவர்களுக்கு எதிரானவர்கள் கூறுகின்றனர். இதற்கு இதுவரை அந்த இரு தரப்பிடமிருந்து எவ்வித மறுப்போ அல்லது கருத்தோ வெளியாகவில்லை.
எனினும் 13க்கு ஆதரவாகவும் எதிராகவும் நாட்டில் கடுமையான நிலைப்பாடுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்திய-இலங்கை உடன்பாட்டை அடுத்து கொண்டுவரப்பட்ட13 ஆவது திருத்தமும் அதையடுத்து ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையும் ஓரளவுக்கு பெயரளவிலாவது அதிகாரப் பரவலை ஏற்படுத்தியுள்ளது. மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரம் இருந்தால் மட்டுமே அவை அர்த்தபூர்வமாக இருக்கும். குறைந்தபட்சம் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. அதைக் கொடுக்க கொழும்புமறுப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறுவதாகும். ஒரு புறம் தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்துவருபவர்கள் அதிகாரப் பகிர்வுக்கு அடிப்படையாக இருக்கும் 13 ஆவது சட்டத்திருத்தம் ஒழிக்கப்பட வேண்டுமென்று குரல்கொடுப்பது நகைமுரண்.
மறுபுறம் 13 ஐ மேலும் வலுப்படுத்தவும், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பெற்றுக்கொள்ள இந்தியாவும் அதன் பிரதமரும் உதவ வேண்டும் என்று கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வேறு சில தமிழ் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. இதில் எந்தளவுக்கு இந்தியா உதவ அல்லது அழுத்தம் கொடுக்க முடியும் என்பதில் பல கேள்விகள் உள்ளன. இந்தியாவிலுள்ள பல மாநில அரசுகள் சட்டங்களை இயற்றினாலும், சில வேளைகளில் மத்திய அரசின் சட்டங்கள் மாநில அரசின் சட்டங்களை கபளீகரம் செய்துவிடும். அதிகாரப் பரவல் மற்றும் பகிர்வு விஷயத்தில் இந்தியாவிலிருக்கும் சமஷ்டி முறைக்கும் அமெரிக்காவில் நிலவும் முறைக்கும் ஏராளமான மாறுபாடுகள் உள்ளன. எனவே 13 ஐ வலுப்படுத்த வேண்டும், சமஷ்டியை காத்திரமாக முன்னெடுக்க இந்தியா உதவ வேண்டும் என்று இந்தியாவிடம் கோரினாலும் அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை கடிதத்தில் கையெழுத்திட்ட கட்சிகள் சிந்தித்தன என்பது தெரியவில்லை.
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையே தமது இலட்சியம் என்று கூறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், அதை பட்டும் படாமலும் கூறும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அதன் சாத்தியக்கூறு பற்றி யோசித்தனவா என்ற வினா எழுகிறது. கொழும்பும் சரி புது டில்லியும் சரி ஒரு நாளும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை. சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதில் இந்தியாவுக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. மாகாண சபைக்கும் மேலாக இலங்கை அரசும் ஒரு போது மேலதிக அதிகாரங்களை வழங்கப் போவதுமில்லை. அதேபோன்று ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணமும் உருவாகப் போவதில்லை என்பதே யதார்த்தமான சூழல். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தென்னிலங்கையில் இன்றைக்கு எதிர்க்கட்சிகளாக இருக்கக் கூடியவர்கள் ஆட்சி அமைத்தாலும், சுயநிர்ணய உரிமை என்பது தீண்டத்தகாத ஒன்றாகவே இருக்கும். சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பதை யார் நடத்துவது, சர்வதேசத்தின் நிலைப்பாடு என்ன, இந்தியா ஆதரவாக இருக்குமா என ஏராளமான கேள்விகள் உள்ளன. எனவே சுயநிர்ணய உரிமை என்ற கோஷம் துரதிஷ்டவசமாக இன்று செல்லுபடியாகும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்.
13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை எனும் முறையை விடுதலைப் புலிகளும் ஏற்றனர் என்பதற்கு திருமதி அடேல் பாலசிங்கம் எழுதியுள்ள புத்தகத்தில் சான்றுகள் உள்ளன. காலஞ்சென்ற திரு ஆண்டன் பாலசிங்கமும் புலிகள் மாகாண சபை முறையை ஏற்றுக் கொண்டனர் என்று நாங்கள் அவரை சந்தித்த போது கூறினார். மேலும் `விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி` என்ற அமைப்பை புலிகள் ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தலில் பங்குபெற எடுத்த முயற்சிகளும் வரலாற்றில் உள்ளன.
இலங்கை அரசு புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது யாவரும் அறிந்ததே. அதில் அவர்கள் ஒற்றையாட்சியை வலியுறுத்துவதற்கே திட்டமிடுகிறார்கள் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில் இருப்பதை விட்டுப் பறப்பதைப் படிப்பது என்பது ஏற்புடைய உபாயமாக இருக்காது. 13 என்றாலே ஒவ்வாமை என்கிற நிலையை மாற்றி அதிலுள்ள குறைகளை நீக்க வழி தேடுவதே சாலச்சிறந்ததாகும்.
மாகாண சபையை வலுப்படுத்தி, கூடுதல் அதிகாரங்களைப் பெற்று அதன் மூலம் மக்களுக்குச் சிறந்த நிர்வாகத்தைக் கொடுப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். 13 ஆவது சட்டத்திருத்தம் என்பது கிழிந்துபோன வேட்டியைப் போன்றாவது உள்ளது. அதையும் இழக்க முற்பட்டால்………….