செல்வச்சந்நிதி ஆலயத்தில் நாளை நடத்த திட்டமிடப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கொரோனா நிலைமை காரணமாக ஒன்றுகூட முடியாது மற்றும் திலீபனை நினைவுகூருவது பயங்கரவாதம் என குறிப்பிட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு தடை உத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பம்!
திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நினைவேந்தலை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்று நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று கூடி நாளை தொண்டமனாறு செல்வச் சந்திநிதியில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு முழுவதும் கடையடைப்புக்கும் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.