முகநூல் பக்கங்களில் சமூக ஈடுபாட்டோடு பங்கெடுக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நன்கு அறிமுகமான தோழர் பாலன் அவர்களது ஒரு முக்கியமான பதிவைப் பார்த்த போதுதான் சத்தியனுக்கு இந்த விரிவான பதிவை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
1987ம் ஆண்டு இந்திய அமைதிப் படை என்ற பெயரோடு எமது தாயகப் பிரதேசங்களில் வந்திறங்கிய இந்திய இராணுவம், முதன் முதலாக பகிரங்கமாக அரங்கேற்றிய மோசனமான இராணுவ செயற்பாடு என்றால் இந்த 12 உயரிய போராளிகள் தங்கள் உன்னத உயிர்களை தாங்களே எடுக்கத் தீர்மானித்த ‘கொடுமையான’ நடவடிக்கை எனலாம்.
அன்று பறிக்கப்பட்ட இந்த உயிர்கள் அனைத்தும் ஒரு அத்தியாயத்தை எழுதிவிட்டுப் போயின. அது என்னவென்றால் இந்திய சமாதானப் படையோ, அன்றி இந்திய அரசோ, அன்றி இந்திய அதிகாரிகளோ ஈழத்தமிழர்களுக்கு ஒரு குறைந்தபட்ச நிம்மதியைத் தானும் பெற்றுத் தரமாட்டார்கள் என்று..
இந்த சம்பவம் பற்றி தனியாக எழுதினாலே பக்கங்கள் நிறைந்து விடும். அதே நேரம் கோபக் கனல்கள் எம் ஒவ்வொருவரிடமிருந்தும் தெறித்துப் பறக்கும்.
அப்படியானால் மரணித்த போராளிகளின் படங்களோடு மேலதிகமாக நான்கு படங்களை சத்தியன் இணைத்திருக்கிறார் என்று வாசிப்பவர்கள் நினைக்கலாம்.
ஆமாம். நிச்சயமாக இந்த நால்வரும் ஈழத்து கவிதை உலகில் முக்கியமானவர்கள். அதோடு எமது விடுதலைப் போராட்டம், சமூகம் சார்ந்த போராட்டங்கள் ஆகியவற்றோடு தம்மை அர்ப்பணித்தவர்கள்.
அவர்களின் கவிஞர் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் மக்கள் மத்தியின் நன்கு அறியப்பட்டவர்கள், மூன்றாமவர் கவிஞர் நல்லை அமிழ்தன்- புலேந்திரராஜா என்று இலக்கிய நண்பர்கள் நன்கு அறிந்த பெயர். நான்காமவர் கவிஞர் சுபத்திரன். மட்டக்களப்பில் இவரது மரணச் சடங்களில் கலந்து கொள்வதற்காக 1979 அல்லது 1980 இல், கல்முனையிலிருந்து பயணித்துச் சென்று பங்கெடுத்த நாள் இன்றும் ஞாபகத்தில் அழிக்க முடியாத ஓவியமாய் சத்திய|னுக்கு..
கவிஞர் நல்லை அமிழ்தன்- புலேந்திரராஜா யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் கல்வித் திணைக்கள பிரதான அலுவலகங்களில் பணியாற்றியவர். வடக்கிலும் கிழக்கிலும் ஆசிரியர்களாக பணியாற்றிய நண்பர்களுக்க புலேந்திரராஜாவின் சேவையின் மகத்துவம் நன்கு தெரிந்திருக்கும்.
இவர்களில், கவிஞர் காசி ஆனந்தன் தவிர்ந்த ஏனைய மூவரோடும் சத்தியனுக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்தன.
அதே போன்று இந்த நால்வருக்கும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் அல்லது தமிழர் தாயகத்தில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சமூகம் சார்ந்த போராட்டங்களில் நிறையவே பங்குண்டு. இதற்காகவே இந்த நான்கு மேலதிக படங்கள் இங்கே காட்சியளிக்கின்றன. அவை பற்றி சில தகவல்களை குறிப்பிடும் போது வாசிப்பவர்களுக்கு அந்தந்த படங்களின் அவசியம் புரியும்.
எமது தாயகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் அதற்கு முன்னர் நடைபெற்ற சமூக அமைப்பு சார்ந்த போராட்டங்கள் ஆகியவற்றை நேரடியாகப் பார்த்தும் வாசித்தும் அறிந்து கொண்ட சத்தியன் இந்த பதிவின் மூலம் சில முக்கியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவே நான்கு கவிஞர்களை சேர்த்துக் கொண்டுள்ளார்.
அதற்கு முன்பதாக, 1987 ஆண்டு இந்திய அமைதிப் படை என்ற பெயரில் எமது தாயக மண்ணுக்கு வந்த நாட்களில் சத்தியன் ஒரு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த ஒரு அரச உத்தியோகத்தராக இருந்தமையால் பல விடயங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது. அந்த விடயங்களும் சில சமயம், இந்த பதிவின் இடையில் செருகப்படலாம்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சில சிரேஸ்ட போராளித் தலைவர்களையும் பலி கொண்ட இந்த சம்பவம் அப்போது இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த எவருக்குமே எதிர்பார்த்திராத அதிர்ச்சியையே தந்திருக்க வேண்டும். சத்தியனுக்கும் அதே அனுபவம் தான்.
கோபம், வெறுப்பு, அச்சம், ஏமாற்றம் ஆகியவை கொண்ட அந்த கொடிதான உணர்வுகள் பலரை உள ரீதியாகவும் பாதித்திருந்தன.
முக்கியமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை மற்றும் போராளிகளைக் கூட உள ரீதியாகத் தாக்கியிருக்கத்தான் வேண்டும்.
அதனைத் தொடர்ந்து எமது மண்ணில் இடம்பெற்ற கொடிதான போர்க்கால அனுபவங்கள் எழுதினால் நீண்ட நெடும் நாவலாகத்தான் முடியும்.
முகநூல்களைப் பற்றி குறிப்பிடும் போது சத்தியனது நண்பர்கள் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் சத்தியனிடம் உரையாடும் போது, “அண்ணர் இந்த பேஸ் புக் என்னைப் பொறுத்தளவில் ஒரு ‘பொதுக் கக்கூஸ்” என்றார்.
அதை சத்தியன் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவருடைய கருத்து. அவரது கருத்துக்கு ஆதாரமாக அவர் கூறியவற்றை இங்கு பதிவு செய்யவும் சத்தியன் இப்போது விரும்பவில்லை.
ஆனால் முகநூல் நண்பர் ‘தோழர் பாலன்’ அவர்களது முகநூல் பக்கம் என்பது ஒரு பல ஆண்டுகளுக்குரிய ‘தகவல் பலகை’ என்றே சத்தியன் கருதுவதுண்டு.
சத்தியனிலும் பார்க்க இந்த கருத்தை ‘ஓகோ’ என்று பாராட்டக் கூடிய நிரந்தர நண்பர்கள் முகநூலில் ‘தோழர் பாலன்’ அவர்களுக்கு உள்ளார்கள் என்பதும் நிதர்சனம்
சரி. இனி இந்த கவிஞர்கள் பக்கம் செல்வோம்…
கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரில் யாரை முதலில் குறிப்பிட வேண்டும் என்ற சததியனின் கேள்விக்கு பதிலாக பதுவை இரத்தினதுரை அவர்களே முன்னால் வந்தார். அதற்கும் பல காரணங்கள் உள்ளன.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களது எழுதத் தொடங்கிய அதே நேரம் இடது சாரி அரசியல் கருத்துக்களைக் கேட்பதிலும் கற்பதிலும் ஆர்வம் கொணடிருந்தார்.
அவரது முதலாவது கவிதைத் தொகுதி ‘வானம் சிவக்கிறது’ என்ற நூலின் வெளியிட்டு விழா சத்தியன் வாழ்ந்த, ‘புதுவை’ அவர்கள் தொழில் செய்த திருநெல்வேலியில் நடைபெற்ற போது சத்தியனுக்கு வயது 12 ஆக இருந்திருக்க வேண்டும்.
சத்தியனுக்கே ஆச்சரியம் என்னவென்றால் அந்த கவிதைத் தொகுதியில் தனது அறிமுகக் கவிதையாக பிரசுரமாகியிருந்த வரிகள் இப்போதும் கூட சத்தியனுக்கு மனப்பாடம்
அதில் ‘புதுவை’ தனது எண்ணத்தையும் நோக்கையும் பினவருமாறு பதிவு செய்கின்றார்
“பெற்ற தாய் எதிரே வந்து புரட்சியின் போது ஏதும் குற்றங்கள் செய்தால் எங்கள் குண்டுகள் அவளின் நெஞ்சை புற்றுகளாக்கும் ஆமாம்! புரட்சியின்போது நாங்கள் சுற்றமும் துணையும் பாரோம் சூடு காண் புலிகள் ஆவோம்” என்று
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது எதுவென்றால்.. தான் பின்னாளில் விடுதலை புலிகள் அமைப்போது இணைவதற்கு சுமார் இருபது வருடங்களுக்கு முன்பாக ஒரு ‘சிவப்புக்’ கவிஞனாக ‘புலிகளைப் போலவே நாம் போரிடுவோம்’ என்று கவிதை வரிகளில் குறிப்பிட்டுள்ளதை.
1971ம் ஆண்டின் நடுப்பகுதியில் கவிஞர் புதுவை இரத்தினதுரையோடு நெருங்கிப் பழகும் ஒரு ‘தம்பி’ யாக சத்தியனுக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்ததற்கு பாலமாக விளங்கியது அப்போது பல கவிஞர்களை உருவாக்கிய “புதுக்கவிதை’ என்னும் புதிய இலக்கிய வடிவம். தமிழ்நாட்டில் இயங்கிவந்த ‘வானம்பாடி’ மாத இதழில் எம்போன்ற பலரின் கவிதைகள் பிரசுரமாகியிருந்தன. வானம்பாடிகள் காலத்தில் தான் மு.மேத்தா தமிழன்பன் போன்றவர்கள் எழுத்துலகிற்கு வந்தார்கள் என்பது ஒரு தகவலே.
மரபுக்கவிதைகளையே எழுதி வந்த புதுவை அவர்கள் நல்ல சந்தம் உள்ள புதுக்கவிதைகளையும் படைத்து சத்தியன், நல்லை அமிழ்தன் போன்ற கவிஞர்களையும் மேலும் அந்நாட்களில் கவிஞர்களாகத் தெரிந்த பலரையும் ஊக்குவித்து வந்தார். 1975ல் குமரனில் அவர் எழுதிய ஒரு கவிதை இன்றும் வரிக்கு வரி சத்தியனுக்கு மனப்பாடம்
‘நாயக்க பரம்பரையை நாடாளவிட்டிருந்தோம்
வா அக்கா என்று ஒரு வனிதையும் ஆளவிட்டோம்
தந்தையாம் தனிப் பெரிய தலைவரையும் அனுப்பிவைத்தோம்
எந்தன் துயர் மாறியதா. இல்லை. இல்லை
இவ்வாறான புதுவையின் கவிதைகளை வாசித்து வாசித்து மகிழ்ந்து அவரைப் போல இல்லாவிட்டாலும் குறைந்தளவு சந்தக் கவிதைகளை ஓரளவு எழுத முடிந்தது சத்தியனால் அன்று.
1974ம் ஆண்டு சத்தியன் எழுதிய கவிதை எழுதிய கவிதைத் தொகுதி யாழ்ப்பாணம் பல் தொழில் நுட்பக் கல்லூரியின் பொறியியல் மாணவர் மன்றத்தினால் வெளியிடப்பட்ட போது அங்கு இடம்பெற்ற கவியரங்கிற்கு கவிஞர் ‘ புதுவை’ தலைமை தாங்கினார். இதில் கலந்து கொள்வதற்காகவே காலஞ் சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராஜன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தார் என்பதும் தென்னிலங்கைக் கவிஞர்களான திக்குவல்லை கமால்
ஜவாத் மரைக்கார், அன்பு ஜவர்கசா
அங்கு கவிதை வாசித்தார்கள் என்பதும் முக்கியமான தகவல்கள்.
இவ்வாறாக கவிதை எழுதுதல் படித்தல் போன்றவை கவிஞர் புதுவை அவர்களோடு பயணம் செய்யும் சந்தர்ப்பங்களை சத்தியனுக்கு ஏற்படுத்தித் தந்தன.
அப்போது நண்பர் புலேந்திரராஜா திருகோணமலையில் கல்வித்திணைக்கள உத்தியோகத்தராக பணியாற்றினார். அங்கு இலக்கிய நண்பர்கள் ஏற்பாடு செய்யும் கவியரங்குகளுக்கு கவிஞரை அழைக்கும் போது அவர் என்னையும் அழைத்துச் செல்வார்.
பஸ்ஸில் தான் பயணம். தனது பஸ் பயணத்தின் போதே அவர் கவிதைகளை எழுதத் தொடங்கிடுவார்கள். அவரது அனுபவம் திறமை அவ்வாறு செய்ய சம்மதிக்கின்றன. பஸ் ஓடிக்கொண்டிருக்கும் போது குலுங்கிக் குலுங்கிச் செல்லுகின்றபோதும் ‘புதுவை’யின் பேனாவும் கொப்பித்தாளும் ஒட்டிக் கொண்டே இருக்கும். அவரது சிந்தனைகளும் தான.
ஆனால் சத்தியன் அப்படியல்ல.. அவரது மாணவன் போல அவர் எழுதும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்.
திருகோணமலை சென்றடைந்தவுடன் நல்லை அமிழ்தனின் அறையில் ஓய்வாக இருந்து சத்தியன் தனது கவிதை வரிகளை எழுதும் போது ‘புதுவை’யும் ‘நல்லை’யும் அரசியல் விடயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அப்போது அவர்கள் இருவரும் சீனச் சார்பு கொம்யூனிஸ்ட் படைப்பாளிகள்.
நல்லை அமிழ்தனுக்கு இன்னுமொரு வேலை. எங்கள் இருவருக்குமாக உணவு தயாரிப்பது.
திருகோணமலை சமூக சேவை மண்டபத்தில் கவிஞர்கள் இராஜ தர்மராஜா,திருமலை நவம் போன்ற கவிஞர்கள் சூழ்ந்திருக்க சத்தியன் தனது கன்னிக் கவிதைகளை வாசித்து பாராட்டுக்களைப் பெறுவார்
இவ்வாறு பல தடவைகள் பயணம். அதன் மூலம் பெற்ற நண்பர்கள். அனுபவம். கவிஞர் புதுவையின் சிறப்புக்கள் சிலவற்றை நல்லை அமிழ்தன் பற்றிய குறிப்பின் போது பகிர்ந்து கொள்ளலாம்.
அடுத்தவர் கவிஞர் காசி ஆனந்தன். உணர்ச்சிக் கவிஞர் என்ற பட்டமும் இவருக்கு உண்டு. இவரது பல கவிதைகளில் ஓரிரு கவிதைகளை சத்தியன் கவிதை இலக்கியம் பற்றிய உரைகளின் போது உதாரணமாக எடுத்து குறிப்பிடுவதுண்டு.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆரம்ப நாட்களில் தமது இயக்கத்தின் போரட்ட நடவடிக்கைகளை அதிகரிக்கும் வகையில்பொருளாதார உதவிகளை வடக்கு கிழக்கு மக்களிடம் நேரடியாகக் கேட்டுப் பெற்றார்கள். சத்தியன் வீட்டுக்கு போராளிகள் வந்தபோது அவரது தாயார் தனது கைகளில் இருந்த ஒரு சோடிக்காப்பில் ஒன்றைக் கழற்றிக் கொடுத்த காட்சி அவருக்கு மட்டுமல்ல அயலவர்கள் சிலருக்கு கூட இன்னும் ஞாபகம் இருக்கலாம்.
இந்த ‘கரு’ ◌தொடர்பாக கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய கவிதை சத்தியனுக்கு நன்கு பிடிக்கும். ஏனென்றால் அந்தக் காட்சியை நேரடியாக அனுபவித்தவர் அல்லவா?
‘தன்னிடம் பொருள் கேட்டு வந்த
போராளிகளிடம் கைகளிலிருந்த
காப்பைக் கழற்றிக் கொடுத்த
அந்த தாய் கூறினாள்
“உங்களில் பலருக்கு
கைகளே இல்லாமல் இருக்கும் போது
எனது கைகளுக்கு எதற்கு காப்பு”
இந்த கவிதையை சிறந்ததும் எளிமையான கவிதை வரிகள் எப்படி அமையலாம் என்பதற்கு உதாரணமாக சத்தியன் மேடைகளில் குறிப்பிடுவதுண்டு
இவ்வாறு கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் பாடல்கள் ஆகியன எப்போதும் அழியாதவை.
ஆனால் இந்த பதிவில் காசி ஆனந்தன் பற்றிய குறிப்பு எழுதுவதற்கு முக்கியமான விடயம் எதுவென்றால், அதுவும் ஒரு கவிதை வரிகள் தான்
‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை
ஆள நினைப்பதில் என்ன குறை’
என்ற திருக்குறள் போன்ற இரண்டு வரிகள் எமது தாயக மககள் அனைவரையும் நன்கு கவர்ந்தவை
ஆனால் பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் இந்த வரிகள் விடுதலைப் புலிகளின் போராட்டடத்தை தட்டிக்கொடுப்பதற்காகத் தான் கவிஞர் காசி ஆனந்தன் எழுதினார் என்று.
ஆனால் உண்மை அதுவல்ல.
சத்தியனைப் போலவே ஆயிரக் கணக்கானவர்களுக்கு நன்கு தெரியும் இந்த வரிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் பாராளுமன்ற அரசியல் நோக்கம் கொண்ட கட்சிக்காகவே எழுதப்பட்டது என்று
1976ம் ஆண்டில் அலலது சிறிது முன்னரோ அன்றி பின்னரோ வந்த நாட்களில், ஆர்வமுள்ள நண்பர்களோடு அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றிய பல கூட்டங்களுக்கு சத்தியன் செல்வதுண்டு. ஒரு தடவை யாழ்ப்பாணம் பிளவுஸ் சந்தியில் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் இந்த வரிகளை மிகவும் அழுத்தமாகவும் அழகாகவும் மேடையில் உரக்க உச்சரித்தது சத்தியனுக்கும் உணர்வை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் இத்தனை ஆயிரம் உரமான உறுதியான அழகிய விடுதலைப் பாடல்களை உருவாக்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் கலைப் பண்பாட்டுக் கழகம் கவிஞர் காசி ஆனந்தனின் இந்த இரண்டு வரிகளையும் எந்த சந்தர்ப்பங்களிலும் இணைக்கவில்லை.
இது சத்தியனது கருத்து. ஆனால் இதில் ஏதாவது தவறிருந்தால் யாராவது சுட்டிக்காட்டலாம்.
சத்தியனது ஆதங்கம் எதுவென்றால் ஒரு பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு இந்த வரிகளில் உள்ள ‘வீச்சு’ அவசியமா என்பது தான். பல ஆண்டுகளாக பாராளுமன்ற அரசியல் மூலம் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் கவிஞர் காசி ஆனந்தனின் இந்த வரிகளை தொடர்ந்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பயன்படுத்தும் போதும் உண்டான ஒரு ஏமாற்றமே இந்தக் கருத்தை பதிவு செய்வதற்கு காரணமாக அமைகின்றது
இந்த வரிகள் தொடர்பாகவும் கவிஞர் காசி ஆனந்தன் தொடர்பாகவும் இன்னும் எஞ்சியிருக்கின்ற கவிஞர்கள் நல்லை அமிழ்தன் , சமூக எழுச்சிக் கவிஞர் சுபத்திரன் தொடர்பாகவும் அடுத்தவாரமும் பல முக்கியமான செய்திகள் சம்பவங்கள் ஆகியன தொடரும்.
சத்தியன் வசனங்கள் என்னும் தொடரை வாரா வாரம் எமது முகநூலிலும் உதயன் பத்திரிகையிலும் றறற.ரவாயலயnநெறள.உய றறற.யெnடியn.உய என்னும் இணையத்தளங்களிலும் பார்க்கலாம்
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!