முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு நீதிகோரி யாழ். ஊடக மன்றம் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியுள்ளது.
கடந்த 12ஆம் திகதி மரக்கடத்தல் இடம்பெறுவதை செய்தி மூலம் வெளிக்கொணர்வதற்கு குறித்த இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற கணபதிப்பிள்ளை குமணன் மற்றும் சண்முகம் தவசீலன் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் கடத்தல்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கினர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பக்கச்சார்பற்ற நீதியினை நீதித்துறையும் ஊடக அமைச்சு மற்றும் ஊடகத்துறையினைப் பாதுகாக்கின்ற அமைப்புகளும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மகஜரை அனுப்பி இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுப்பதற்கு தான் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.