தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து தேசிய கட்சிகளும் ஸ்தாபன ரீதியாக செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவ்வாறு செயற்படுவது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் – நல்லூர் இளம்கலைஞர் மண்டபத்தில் இன்று (17) காலை அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் கூடி கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகளாக நாம் இன்று மீண்டும் கூடி ஆராய்ந்தோம். இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கட்சிகள் ஸ்தாபன ரீதியாக செயல்பட வேண்டும் என கலந்து கொண்ட அனைத்து பிரதிநிதிகளும் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
அதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அமைப்பு ரீதியாக எவ்வாறு நாம் செயற்பட வேண்டும். எவ்வாறு நாம் ஸ்தாபன ரீதியாக அமைய வேண்டும் என அந்த குழு ஆராயவுள்ளது. அவர்கள் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.
அதன் பின்னர் நாம் அந்த அறிக்கை தொடர்பில் ஆராய உள்ளோம். மேலும் இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும் நாம் தமிழ்தேசிய பரப்பில் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக இயங்குவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசவுள்ளோம்.
மேலும் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழ் தேசிய பரப்பில் இயங்குகின்ற நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து பயணிப்பது என தீர்மானித்துள்ளோம். குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக எந்த பிரச்சினைகள் எழுந்தாலும் அனைத்து கட்சிகளும் உடனடியாக ஒன்றுகூடி தீர்மானங்களை எடுத்து ஓரணியில் பயணிப்பது என தீர்மானித்து உள்ளோம்.
20ம் திருத்தம் தற்போது பேசு பொருளாக உள்ளது. அந்த இருபதாவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக தமிழ்தேசிய பரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே நாடாளுமன்றத்தில் அந்தந்த கட்சிகளின் பாராளுமன்ற குழு ஒன்று கூடி அதனை எதிர்ப்பார்கள் என நான் நம்புகின்றேன்” – என்றார்.