யாழில் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், இன்று மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனைத்தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்தார். பின்னர் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன், ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
போர் சூழலில் யாழில் இருந்து துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்றவற்றில் பணியாற்றி இருந்தார்.
அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர்.
குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது