
அனுஷான்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும், சட்டவிரோத தேக்கு மர மோசடிக் குறித்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்துகொண்டிருந்த, இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இலங்கை வம்சாவளி, நோர்வே நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திசாந்தன் இராஜேந்திரன்
ஒஸ்லோவில் இருந்து நாடு திரும்பிய 25 வயது திசாந்தன் இராஜேந்திரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.எஸ். லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கணபதிபிள்ளை குமனன் மற்றும் சண்முகம் தவசீலன் ஆகிய இரு ஊடகவியலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியது, மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் வனப்பகுதியில் சட்டவிரோத மரக் கடத்தல் தொடர்பான காணொளி ஆதாரங்களை நீக்கியதாக அவர் மற்றும் மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கிய சந்தேகநபர்களான யோகேஸ்வரன் அனுஜன் மற்றும் ராஜேந்திர ஆகியோரை மாத்திரமே பொலிஸாரால் இதுவரை கைது செய்ய முடிந்துள்ளது.
தாக்கப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்களும் பொலிஸார் சரியாக செயற்படாததால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அஞ்சுகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட ஏனைய இருவரையும் கைது செய்யக் கோரி வடக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒக்டோபர் 15ஆம் திகதி, கோஷங்களுடன் கூடிய பதாதைகளை ஏந்தியவாறு முல்லைத்தீவில் போராட்டம் நடத்தினர்.
சட்டவிரோத மர வியாபாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸார் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கைகள் எழுத்து மூலமாக மாவட்ட செயலாளர், வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டன.
ஊடகவியலாளர்கள் தேக்கு மரக்கன்றுகளை மாவட்ட செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு பரிசளித்ததோடு, மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வன பாதுகாப்பு அலுவலகம் முன்பாக மரக்கன்றுகளை நட்டனர்.
போராட்டக்காரர்களைச் சந்தித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஏனைய இரு சந்தேகநபர்களையும் இரவுக்குள் கைது செய்வதாக உறுதியளித்த போதிலும், இதுவரை அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும், உள்ளூர் அதிகாரி ஒருவர் மற்றும் ஒரு ஆளும் கட்சி அரசியல்வாதியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்ற நிலையில் சட்டவிரோத மரக் கடத்தல்காரர்களுக்கு வலுவான அரசியல் செல்வாக்கு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக சட்டத்தரணி அன்டன் புனித்நாயகம், கே.கனேஸ்வரன், தச்சனாமூர்த்தி கங்காதரன், எம்.ஏ.நிம்சாத் மற்றும் பி.சுதர்சன் ஆகியோர் இந்த ஊடகவியலாளர்கள் தனியார் சொத்தில் அத்துமீறி உள்நுழைந்ததாக வாதிட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் வர்த்தகர்களின் வளாகத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் அத்துமீறியமை மற்றும் திருடிய குற்றச்சாட்டு தொடர்பில் காணொளி சந்தேகநபர்களால் பதிவு செய்யப்பட்டதாக, இரு ஊடகவியலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கு இன்று (20/10/20) விசாரணைக்கு எடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர். பொலிசார் அளித்த அறிக்கை முழுமையாக இல்லை என்றும் அதை சீர் செய்து அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டார். சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 42 தேக்குமரக் கட்டைகள் முல்லைத்தீவு வனச்சரக அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சட்டவிரோதமாக மரங்களை வெட்டியது தொடர்பில் தனியொரு வழக்கு பதியப்படவுள்ளது.
புகைப்படம் உதவி JDS Lanka