யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் மாத்திரம் பல வர்த்தகர்ளுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 116 வழக்குகள் அதிகாரசபையினால் பதியப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரியும் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளருமாகிய அப்துல் லத்தீப் ஜஃபர் ஸாதிக் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
குறித்த வழக்குகள் காலாவதி, விலைப்பட்டியலின்மை, உத்தரவாதமின்மை, இறக்குமதி விபரமின்மை, SLS தரச்சான்றுதலின்மை, கட்டுப்பாட்டு விலையினைமீறியமை மற்றும் பொறிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பான காரணங்களுக்காகவே பதியப்பட்டதாகவும் அதற்காக தற்போது வழக்குகளில் குற்றவாளிகள் ஆஜராக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
குறித்த காலப்பகுதியில் யாழ். மாவட்ட எல்லைக்குட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 75 வழக்குகளுக்கு ரூபா 4 இலட்சத்து இரண்டாயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது எனவும், அவர் சுட்டிக்காட்டினார். மேலும் தொடர்ச்சியாக தமது உத்தியோகத்தர்களினால் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பொருள் பதுக்கலில் ஈடுபடுவோர் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.