அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கிய நான்கு பிள்ளைகளின் தாய், பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியை சேர்ந்த காளி கிட்னம்மாள் (65 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த தாய், பூஜைக்காக வாழையிலை வெட்டுவதற்காக குறித்த தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் வராதமையினால், வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அவர், இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
அதனை தொடந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டது.
குறித்த தாயின் சடலம் நுவரெலியா நீதவானின் மேற்பார்வையினை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.