மூன்றாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக நாளை(22.11.2020) பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன என்று அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போதைய சூழலில் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து பாடசாலைக் கொத்தணியை உருவாக்கிவிடாதீர்கள் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன என அரசு அறிவித்துள்ள நிலையில், பாடசாலைக் கொத்தணியை உருவாக்க வேண்டாம் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“நாளை தரம் 6 முதல் தரம் 13 வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள். இன்றுவரை மரணங்கள் அதிகரித்தவாறு உள்ளன. தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்ந்தே செல்கின்றது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொத்தணியும், பேலியகொட கொத்தணியும் நாடு முழுவதும் பரவியுள்ளது.
ஜீ.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கும்போதே மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். அதன் காரணமாகவே பரீட்சையை இரு வாரங்களுக்காவது ஒத்திவைத்து தொற்றைக் கட்டுப்படுத்திய பின்னர் பரீட்சையை நடத்துங்கள் எனக் கேட்டோம். பரீட்சை தொடர்ந்தது. தொற்றோடு மாணவர்களும் பரீட்சை எழுதினர். அதனை இயல்பு நிலை எனக் கருதிய மக்கள் சாதாரணமாக நடந்து கொண்டனர். அதன் விளைவே இன்றைய மோசமான நிலைக்கும் காரணம்.
நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாகுவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்தோடு சில அறிவுறுத்தல்கள் இன்னும் தெளிவில்லாமல் இருக்கின்றன.
- ஆரம்பப் பிரிவுகள்( தரம் 1 முதல் தரம் 5 வரை) இணைந்துள்ள இடைநிலை, மேல்நிலைப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா?
- வெவ்வேறு மாவட்டங்களில் கடமையாற்றும், வேறு மாகாணங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகள் இயங்கும் பிரதேசங்களுக்கு எவ்வாறு செல்வது அவர்களின் கடமை ஒழுங்கு என்ன?
போன்ற விடயங்களில் தெளிவான அறிவித்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.