ஒவ்வொரு நாடும் இத்தொற்று பரவுதல் சவாலை முறியடிப்பதற்கான முயற்சிகளை வெவ்வேறு மட்டங்களில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் பரவுதல் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதன் விளைவாக உலகில் 06 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துமுள்ளனர். இருப்பினும் 04 கோடி 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில் இலங்கையில் இற்றை வரையும் 20, 697 பேர் இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு 94 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 15447 பேர் குணமடைந்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இத்தொற்று பரவுதல் மூலம் அற்ப அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் ஈடுபடுவது கவலையளிப்பதாகவும், தற்போதைய சூழலில் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு இந்நெருக்கடியை வெற்றி கொள்ள குழுவாக இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய அழைப்பாகும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவேயாகும். கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டிய சவாலே இத்தொற்று.
இந்நாட்டில் இத்தொற்றின் முதலாம் அலை பதிவாகத் தொடங்கியது முதல் அதன் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படலாயின. இதன் பயனாக ஏப்ரலின் பின்னர் இத்தொற்று பெருவீழ்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டதோடு, நாட்டில் கட்டம் கட்டமாக இயல்பு நிலையும் ஏற்படுத்தப்பட்டது. இதனையிட்டு உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட சர்வதேச அமைப்புகளும் நாடுகள் பலவும் இலங்கையை பாராட்டின.
உலகின் பல நாடுகளில் மாத்திரமல்லாமல் எமது அயல் நாடான இந்தியாவிலும் இத்தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருந்த சூழலில்தான் இத்தொற்று பரவலை விரைவாக பெருவீழ்ச்சி நிலைக்கு கொண்டு வர முடிந்தது. அதுவும் இத்தொற்றின் பரவுதல் அச்சுறுத்தல் இப்பிராந்தியத்திலும் உலகிலும் நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில்தான் இந்த அடைவை இலங்கை பெற்றுக் கொண்டது.
இந்நிலையில்தான் ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டு இத்தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் ஆரம்பமானதோடு, பேலியகொடை மீன்சந்தையின் ஊடாக நாட்டின் பல பிரதேசங்களிலும் பதிவாகும் அபாயம் ஏற்பட்டது.
இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தொற்றின் முதலாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுத்த நடவடிக்கைகளின் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் தற்போதைய சூழலில் முதலாம் கட்டத்தைப் போன்று முழு நாட்டையும் முடக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என்பதுதான் கொவிட் 19 தொற்று பரவுதல் கட்டுப்பாட்டுக்கான தேசிய நிலையத்தின் கருத்தாகும். தற்போது மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் இத்தொற்று அதிகம் பதிவாகின்றது. அதனால் அப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு இத்தொற்று பரவும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.