கதிரோட்டம் 27-11-2020
மாவீரர்களை நினைவு கூரும் நாளான இன்று கார்த்திகை 27ம் திகதிக்கு எமது இனம் கொடுத்து வந்த முக்கியத்துவம் இந்த வருடம் செயல் வடிவத்தில் பின்னடைந்துள்ளது.
எமது தாயகத்தில் அடக்குமுறை அரசின் ஏவல் நாய்களாம் இராணுவமும் காவல்துறையும் மக்களையும் மாவீரர் குடும்பங்களையும் அச்சுறுத்தியும், நீதி மன்றங்கள் மூலமாக வாதிட்டுப் பார்த்த எமது தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் போன்றோர்களின் கைகளைக் கட்டியும் வாய்களை மூடியும் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட தந்திரங்கள் அங்கே உளரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
புலம் பெயர்ந்த நாடுகளிலே மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த இந்த வருடாந்த நினைவேந்தல் நிகழ்வுகள் கொடிய தொற்று நோய் காரணமாக அமுல்செய்யப்பட்ட அரசு சார்ந்த சட்டங்கள் மூலமாக அமைதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் மறைந்த மாவீரர்களுக்காக உலகெங்கும் ஊடக நிறுவனங்கள் தங்கள் பங்கை இயன்றளவு ஆற்றியுள்ளார்கள் என்பதும் உண்மை. அந்த வகையில் எமது ஊடக நிறுவனம் மறைந்த மாவீரச் செல்வங்களின் குடும்பங்களின் உறவுகளோடு கைகோர்த்து அவர்கள் இழந்து நிற்கும் வேங்கைகளை வணங்கி நிற்கின்றோம்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் தளர்ந்த நிலையில் உணர்வுகளை நாம் மிகவும் அடக்கமாகப் பகிர்ந்து கொண்டாலும் இலங்கைப் பாராளுமன்றத்தில் சில அதிசயங்கள் இடம் பெற்றுள்ளன.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சிவஞானம் பாராளுமன்றத்திற்குள்ளேயே பல பெரும்பான்மை இன உறுப்பினர்களுக்கு முன்பாக உணர்வுபூர்வமான உரையொன்றை ஆற்றியிருக்கின்றார். அத்தோடு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்து இடையூறு செய்யாமல் செவிமடுத்துள்ளார்கள். இவ்வாறான வேறுபட்ட வகையில் இவ்வருட மாவீரர் நாளை நாம் கடந்து செல்கின்றோம். எவ்வாறாயினும் எவ்விதமான மனச்சோர்வும் இன்றி எமது வழமையான கடமைகளில் கண்ணாயிருந்து இதையும் ஏற்றுக்கொண்டு அடுத்துள்ள பணிகளில் கண்ணாயிருப்போம்!