(மன்னார் நிருபர்)
(07-12-2020)
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட ‘புரேவி புயல்’ காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொதி ஒன்று இன்று திங்கட்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினரும்,மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கு அமைவாக ‘முஸ்லீம் நிவாரண குழு’ அமைப்பினால் சுமார் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 490 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
சுமார் 3.30 மணி அளவில் குறித்த நிகழ்வு காதர் மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
-இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இதே வேளை குறித்த நிகழ்வுக்கு வருகை தந்த மன்னார் உப்புக்குளம் பகுதி மக்கள் தமக்கு உலர் உணவு பொதி வழங்குவதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் தாங்களும் வெள்ளப் பாதிப்பை எதிர் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த தரப்பினருக்கும் உரிய முறையில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு உணவு பொதிகள் வழங்கப்படுமென அவர் மக்களுக்கு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 490 குடும்பங்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.