வீரபத்ர தம்ம கொரோனா நிவாராணி’ என்ற கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்குவதாக கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்த ஆயுர் வேத வைத்தியர் தம்மிக்க பண்டார என்பவர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் அவர் குறிப்பிட்ட ஆலயப் பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்துச் சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
இது குறித்து தெரியவருவதாவது,
கேகாலையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தயாரித்துள்ள கொரோனா பானம் இன்று 5 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் அதனைப் பெற இன்று வைத்தியரின் வீட்டுச் சூழலில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கேகாலை – ஹெட்டிமுல்ல ஆயுர்வேத வைத்தியரின் வீட்டை சூழ திரண்டுள்ள பொதுமக்களைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதியில் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவர் தம்மிகா பண்டார அண்மையில் குறிப்பிட்ட மருத்துவர் அறிவித்திருந்தார்.
இந்தப் பானம் வாழ்நாள் முழுவதும் கொரோனா தடுப்பாற்றலை வழங்குவதாகவும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவர் விளம்பரம் செய்தார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, தொழிற்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல, கோவிட் 19 தொற்று நோய் விவகார அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரும் இந்த கொரோனா பானத்தை அருந்தி ஊடகங்களுக்கு முன்பான அவற்றை ஊக்குவித்துள்ளனர்.
அண்மையில் தென்னிலங்கைத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இந்த கொரோனா பானத்தை ஒரு தேக்கரண்டி அளவுக்கு ஒரு நாளில் 3 வேளை எடுத்துக்கொண்டால் ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும் என ஆயுர்வேத மருத்துவர் தம்மிகா பண்டார தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே இன்று அவர் வழங்குவதாக அறிவித்துள்ள 5,000 இலவச கொரோனா பானத்தைப் பெற ஆயிரக்கணக்கானவாகள் அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதேவேளை, மருத்துவரின் இந்த அறிவிப்பை அடுத்து கோவிட்-19 தொற்று கட்டுப்பாடுகளை மீறி ஆயிரக்கணக்கானவர்கள் சிறிய பகுதியில் திரண்டுள்ளமை குறித்து பல்வேறு தரப்புக்கள் விமா்சித்துள்ளன.