இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பாலமுனைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில், குடும்பஸ்தரான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
தாஹீர் தஸ்பீக் (33) எனும் 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கத்திக்குத்தக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பாலமுனையைச் சேர்ந்த இவர், ஒலுவிலில் திருமணம் முடித்துள்ள அதேவேளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று முன்தினம் புதன்கிழமை பாலமுனையிலுள்ள தனது மூத்த சகோதரரரின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு தனது சகோதரரின் குடும்பத்திற்கும் சகோதரி ஒருவரின் குடும்பத்திற்கும் இடையில் தகராறு நடைபெறுவதை அவதானித்த இவர், சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதையடுத்து, உறவினர் ஒருவரின் கத்திக் குத்துக்கு இலக்கான அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார்.
மிக நீண்டகாலமாக இருந்துவந்த குடும்ப பகையின் பின்னணியிலேயே இக்கொலைச்சம்பவம் நடைபெற்றிருக்கலாமென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
இதேவேளை, இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் கத்தி குத்துக்கு இலக்காகி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு இன்று (10) நேரடியாகச் சென்ற அக்கரைப்பற்று மாவட்ட/நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு, இது தொடர்பாக பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சம்ர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.
நீதவானுடன் சட்ட வைத்தியதிகாரி எஸ்.எம். றிபாஸ்தீன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மரணித்தவரின் சடலத்தையும் நீதிபதி பார்வையிட்டதுடன் மெலதிக விசாரணைக்குப் பணித்துள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை, அக்கரைப்பற்று நீதவான் ஹம்சா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்