(மன்னார் நிருபர்)
(14-12-2020)
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 2433 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மற்றும் 50 கிலோ ஏலக்காய் போன்றவை தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் வைத்து இன்று திங்கட்கிழமை(14) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி கட்டுக்காரன் குடியிருப்பு காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சற்றுத் தொலைவில் கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை(14) காலை நிறுத்தி வைக்கப்பட்ட மகேந்திர ரக வாகனத்தில் குறித்த மஞசள் மூடைகள் மற்றும் ஏலக்காய் மூடை என்பன இராணுவம் மற்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 2433 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மற்றும் 50 கிலோ ஏலக்காய் போன்றவை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-தலைமன்னார் பொலிஸார் குறித்த நபர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-விசாரனைகளின் பின்னர் சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதோடு,மீட்கப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் , ஏலக்காய் மூடை ஆகியவை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.