(மன்னார் நிருபர்)
(16-12-2020)
கடந்த திங்கள் கிழமை காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அப்போது மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஆரோக்கிய குரூஸ்,சுரேஸ், சத்யா, சில்சன் என்பவருக்கு சொந்தமான 4 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நெல்சன், முனியசாமி, குமரேசன், உள்ளிட்ட 29 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைபடுத்தப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 29 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் கைது செய்ததை கண்டித்து இன்று புதன் கிழமை(16) காலை முதல் மீனவர்களையும் படகுகளையும் இலங்கை அரசு விடுதலை செய்யும் வரை ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை காலை விசைப்படகு உரிமையாளர்கள் சிலர் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என மீன்பிடி அனுமதி சீட்டு வாங்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு கூடி இருந்த இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு காரைநகர் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் மீனவர்கள் விடுதலையாகி தாயகம் திரும்பும் வரை மீனவர்கள் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என அனுமதி சீட்டு வாங்க வந்த மீனவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இலங்கையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் உடல் நலம் குறித்து இந்திய துணை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததுடன், சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளுடன் மீனவர்களை உடனடியாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மீன்வளத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மீன்வர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்தது மீன்வளத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மீனவர்களை மீட்க இலங்கை இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.