ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வருடத்தின் நத்தார் தினம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜெபரட்ணம் அடிகளார் மேலும் கூறியுள்ளதாவது, “கிறிஸ்துவின் பிறப்பு விழாவை, இந்த உலகத்தில் சூழ்ந்திருக்கின்ற பயங்கர தொற்று வியாதியின் மத்தியிலேயே மக்கள் கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்படியான காலத்தில்தான் ஆண்டவருடைய பிரசன்னம் , அவருடைய வல்லமையை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும் விதமாக நாங்கள் எங்களுடைய திருநாட்களை கொண்டாட வேண்டும்.
குறிப்பாக இந்த காலத்தில் பல்வேறு தேவைகளோடு வாழ்கின்ற மக்கள், ஏழை மற்றும் எளியவர்களுக்கு இரக்கம் காட்டி அவர்களுக்கு உதவ வேண்டும்.
அது மட்டுமல்லாது, நம்பிக்கை இழந்து வாழுகின்ற மக்களுக்கு நாங்கள் நம்பிக்கையினை கொடுக்கின்ற விழாவாக இந்த கிறிஸ்மஸ் விழாவினை கொண்டாட வேண்டும்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் பிரசன்னமாகி இருந்து, அவர்களை வழி நடத்துகின்றார் என்ற உண்மையை சொல்லி, எல்லோருடைய வாழ்விலும் இருக்கின்ற தீமைகளை ஆண்டவர் நிச்சயமாக அகற்றுவார் என்ற நம்பிக்கை ஒளியை எல்லாருக்கும் கொடுக்கின்ற விதத்தில் நாங்கள் நடந்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்