ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வேணவாவினை வென்றிட தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் செயற்படும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய அதி முக்கிய காலகட்டமாக பிறக்கின்ற 2021 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. பூகோள அரசியலின் சூழ்ச்சுமங்களைப் புரிந்துகொண்டு தாயகத்தை வென்றெடுக்கும் தாயக்கட்டைகளை உருட்ட அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.
கடந்து போனவை கடந்தவையாகவே இருந்துவிட்டு போகட்டும். நடந்து முடிந்தவை நடந்ததாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவற்றை கூறாய்வு செய்வதால் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் தடைகள்-தாமதங்கள் ஏற்படுமே தவிர வேறேதும் நிகழப்போவதில்லை. இருந்த போதிலும் கற்றுக் கொண்ட பாடங்களின் பட்டறிவு மூலம் அவை மீளவும் நிகழாமல் இருக்க மீள் உறுதி செய்வதும் தலையாய கடனாகும். தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் காலத்தின் தேவை அறிந்து தான் பல மாற்று இக்கங்களை ஒன்றிணைத்துத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கினார்.
புரட்சி இயக்கங்கள் அழிக்கப்பட்டாலும் ஆனால் அதன் பாடங்கள் என்றும் அழிவதில்லை.! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
நடந்து முடிந்த, நடைபெற்று வரும் திட்டமிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புடன் நேரடியாக தொடர்புபட்ட இனப்படுகொலையாளிகள் மீண்டும் ஆட்சிபீடமேறியுள்ள நிலையில், அதுவும் தனிச் சிங்கள பௌத்த பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு தனிச்சிங்கள பௌத்த பேரினவாத அரசாகவே பரிணமித்துள்ள ராஜபக்சகளின் காலமென்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் தீர்மானகரமிக்கதாக மாறியுள்ளது.
கடந்த 72 ஆண்டுகால இலங்கையின் சிங்கள பொளத்த பேரினாவத பேயாட்டம், தற்போது வௌ;வேறு நவீன வடிவங்களில் முழுவீச்சில் ஏலவே திட்டமிட்டு தமிழர் தாயகப் பகுதியெங்கும் ஆட்சி-அதிகார அலகுகளினூடாக நகர்த்தப்பட்டு நடைமுறையில் உள்ளதை நன்கறிவோம்.
அது வெளிப்பார்வைக்கு தெரிய வரும்வரை காத்திருப்போமாயின் தமிழனத்திற்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகவே அமையும். சிங்களம் நாசூக்காகத் திட்டமிட்டு தமிழர் பிதேசம் நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. கிழக்கில் ஏற்கனவே வனவிலாகா, தொல்லியல் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் ஊடாகத் தமிழர்களின் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
இலங்கைத் தீவின் ஆதிகுடிகளான தமிழ் மக்களின் இருப்பின் மூலாதாரமான மரபுவழித் தாயகம் துண்டாடப்பட்டும், கபளீகரம் செய்யப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வருகிறது. கொஞ்சம் தாமதிபோமாயின் ஆண்ட பரம்பரையான தமிழினம் இலங்கைத் தீவின் அடிமை இனமாக மாறும் வரலாற்று துன்பியல் நிலைக்கே இட்டுச் செல்லும்.
நல்லெண்ணத்தை காண்பித்து காத்திருக்கின்றோம், எதற்கும் ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கின்றோம் என்ற பரீட்சார்த்த முடிவுகளை முன்னிறுத்தி ஒரே ஒரு நாள் பொழுதையேனும் வீணாக்க முடியாது. அவ்வாறு காத்திருபோர் கனவுகள் சிங்கள பௌத்த பேரினவாத தரப்புகளால் நிச்சயம் கலைக்கப்படுவது திண்ணம். இதுவே வரலாற்றுப் பட்டறிவும் கூட.
புதிது புதிதாக ஒவ்வொருதரப்பார் பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இது ஒன்றும் விளையாட்டு அல்ல. ஈழத்தமிழர்கள் நெருப்பாற்றில் நின்றுகொண்டு இருப்பையும் வாழ்வாதாரத்தையும் தொலைக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டள்ளனர்.
உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுசனங்களே! மேதகு வே. பிரபாகரன்
வடக்கு கிழக்கு இணைந்த ஈழத்தமிழர்களது மரபுவழித் தாயகம் உறுதி செய்யப்பட்டு, அதனடிப்படையில் தமிழர்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கவும், தேசிய இனமாக ஏற்று சுய கௌரவத்துடன் எமது தலையெழுத்தை நாமே தீர்மானிக்கும் வகையிலான சுயாட்சி அதிகாரத்தை ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்க வேண்டியது ஒன்றுதான் எம் அனைவர் முன்பாகவும் உள்ள ஒரே தீர்வாகும்.
தமிழ்மக்களாகிய நாம் ஒரு தேசியக் கட்டமைப்பைக் கொண்டவர்கள். வரலாற்று ரீதியாக நாம் ஒரு தேசியமாகவே வாழ்ந்து வந்தோம், தேசியமாகவே வாழ்ந்து வருகின்றோம், தேசியமாகவே வாழப்போகின்றோம்! மேதகு வே. பிரபாகரன்
தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தாயகம் மற்றும் புலம்பெயர் தளம் ஆகியவற்றில் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசிய தரப்புகளிடையே தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இரண்டுபட்ட நிலைப்பாடு இருப்பதானது, தீர்வுக்கே விரும்பாத சிங்கள ஆட்சியாளர்களுக்கும், எம்மை முன்னிறுத்தி தத்தமது சுயலாப அரசியலை நிறைவேற்றத் துடிக்கும் வல்லாதிக்க சக்திகளுக்கும் ஏதுவான சூழலையே ஏற்படுத்திவிடும்.
இவ் வரலாற்றுப் படிப்பினையை முன்னிறுத்தி மேற்குறித்த ஒற்றை நிலைப்பாட்டினை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிப்போம் எனவும், அதன் மூலமாக பிறக்கின்ற 2021ஆம் ஆண்டு ஏற்படுத்தப் போகும் சவால்களை கடந்து, தமிழ் மக்களது இருப்பினையும், தமிழர் தாயகத்தின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய திடசங்கற்பம் கொள்வோம்.
நாம் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்பட்டால் தான் நமது போராட்டத்தில் நம்மால் வெல்ல முடியும்..! விளாதிமிர் லெனின்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் –
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –