சிங்கள தேசத்தின் அச்சத்தை சுரேன் ராகவன் எம்.பி பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
கனடா, ஒன்ராறியோ மாகாண பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தமிழினப்படுகொலையினை மையப்படுத்திய கல்விவார சட்டமூலம் இலங்கையின் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறதென இலங்கையின் மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, சுரேன் ராகவன் எம்.பியின் கருத்து என்பது, கனடாவில் வலுவுள்ள சக்தியாக ஈழத்தமிழ் சமூகம் மாறிவருகின்ற நிலையில், அதன் மீதான சிறிலங்கா அரசின் அச்சத்தையே இது வெளிப்படுத்துகின்றது. ஒருவகையில் இது புலம்பெயர் தமிழ்சமூகத்தின் மீதான அச்சமாகும். கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின்படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தைத்திருநாளை மையப்படுத்தி தமிழர் மரபுத் திங்கள் அங்கீகாரம் என திரண்டுவரும் கனேடிய ஈழத்தமிழ் சமூகத்தின் சக்தியை கண்டு சிறிலங்கா அச்சப்படுகின்றது.
மேலும் தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கிடைக்காத வரையிலும் இலங்கைத்தீவில் இனநல்லிணக்கம் என்பது சாத்தியமற்றது. நிவாரணங்கள் அல்ல தமிழர்களுக்கான நீதி. அபிவிருத்தி அரசியல் அல்ல தமிழர்களுக்கான பரிகார நீதி. தமிழனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும், அதற்கான பரிகாரநீதியும் எட்டும் போது, இனநல்லிணக்கம் என்பது இலங்கைத்தீவில் சாத்தியமாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.