யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
இம்முறை ஜெனிவாவை எப்படிக் கையாள வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தரப்பில் மூன்று நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. முதலாவதாக ஒரு வார்த்தைப் பிரயோகம் குறித்து கொஞ்சம் தெளிவாக பார்க்க வேண்டும். இங்கு கையாளுதல் என்ற வார்த்தை பொருத்தமானதா? தமிழ்த் தரப்பினால் ஜெனிவாவைக்கையாள முடியுமா? ஏனென்றால் அது அரசுகளின் அரங்கம். அரசற்றதரப்ப்பாகிய தமிழ் மக்களுக்கு அங்கே உத்தியோக பூர்வமாக இடம் இல்லை.
எனினும் ஓர் நிகழ்வுகளிலும் நிழல் அறிக்கைகளிலும் தனிப்பட்ட சந்திப்புகளின் போதும் அவர்கள் தமது கருத்துக்களை உருவாக்கலாம். அதைத்தான் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் தரப்பு செய்து வருகிறது. ஜெனீவாவை ஏற்றுக்கொண்ட தரப்புக்களும் சரி ஏற்றுக் கொள்ளாத தரப்புக்களும் சரி கடந்த ஆறு ஆண்டுகளாக ஜெனிவாவை நோக்கி செல்கின்றன. அங்கு போய் ஏதோ ஒரு விகிதமளவுக்கு அரசுகளின் மத்தியில் கருத்துருவாக்கத்தைச் செய்ய முயற்சித்து வருகின்றன.
அரசுகளின் அரங்கான ஜெனிவாவில் அரசற்ற தமிழ் மக்களின் குரல் எப்பொழுது உற்றுக்கேட்கப்படும்? எப்பொழுது என்றால் அரசுகளால் இலங்கை அரசாங்கத்தை வெற்றிகரமாகக் கையாள முடியாத போது ஓர் அழுத்தப் பிரயோகக் கருவியாக அவர்கள் தமிழ் தரப்பை அணுகுவார்கள்; கையாளுவார்கள். இப்படிப் பார்த்தால் இம்முறை அவ்வாறு தமிழ் தரப்பைமேற்கு நாடுகள் அணுக வேண்டிய ஒரு புவிசார் அரசியல் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கோவிட்-19 க்குப் பின்னரான உலகச் சூழலானதுசீனாஎதிர் அமெரிக்கா என்ற விதமாக அதிகரித்த அளவில் துருவமயப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த அடிப்படையில் பார்த்தால் இம்முறை ஜெனிவாவில் தமிழ் தரப்பை ஏதோ ஒரு விகிதமளவுக்குக் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை அரசுகளுக்கு உண்டு. அதற்காகத் தமிழ்த்தரப் பின் கோரிகைகளை இணை அனுசரணை நாடுகள் தீர்மானமாக மாற்றி விடும் என்றெல்லாம் அம்புலிமாமாக் கதைப் பாணியிலான கற்பனைகளுக்கு இடமில்லை.
ஜெனீவாவில் இறுதி முடிவைஅரசுகளே எடுக்கும். அவை அரசுக்கும் அரசுக்கும் இடையிலான பாதுகாப்பு; வர்த்தகம் போன்ற நிலையானஉறவுகளின் அடிப்படையில் அந்த முடிவுகளை எடுக்கும். ஜெனிவாவைப் பொறுத்த வரை இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்காக இணைக் குழு நாடுகள் என்ற நாடுகளின் கட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. கனடா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்றினிக்ரோ, ஜேர்மனி ஆகிய நாடுகளே அக்கட்டமைப்புக்குள் அடங்குகின்றன. பிரித்தானியா இக்கட்டமைப்புக்குள் முதன்மை வகிக்கிறது. ஜெனீவாத் தீர்மானத்தை இறுதியாகுவது இந்த நாடுகள்தான்.
சரி இனி தமிழ் தரப்பில் ஏன் மூன்று நிலைப்பாடுகள்காணப்படுகின்றன என்று பார்க்கலாம். இம்முறைதமிழ்த் தரப்பு மூன்று தரப்புகளாக நிற்கிறது. அதிகம் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டமைப்பு. அடுத்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. அடுத்தது தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி. இவ்வாறு மூன்று தரப்புக்கள் ஏற்படக்காரணம் மாற்று அணி இம்முறை பெற்ற வெற்றிகள் தான். அதனால் கூட்டமைப்பின் ஏகபோகம் ஒப்பீட்டளவில் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இம்முறை தமிழ்த் தரப்பு எனப்படுவது இம் மூன்று தரப்புகளையும் உள்ளடக்கியது தான். இந்த யதார்த்தத்தை முன்வைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சில ஜெனிவாவை எதிர்கொள்வதற்காக இம் மூன்று தரப்புகளையும் ஒருங்கிணைக்கும் விதத்தில் சில முன்மொழிவுகளை அனுப்பி வைத்தன.
எனினும் இது விடயத்தில் இன்று வரையிலும் ஒரு பொதுக்கருத்து எட்டப்படவில்லை.
சரி அடுத்ததாக அந்த மூன்று நிலைப்பாடுகளும் என்ன என்று பார்க்கலாம். முதலாவது- கூட்டமைப்பினுடையது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஜெனிவாவை அதிகம் உத்தியோக பூர்வமாகக் கையாண்டு வந்தது அக்கட்சி தான். கடந்த ஆறு ஆண்டுகளாக இணையனுசரணை நாடுகளின் மத்தியில் தமிழ்த்தரப்பாக நின்று ஏதோ ஒரு விகிதமளவுக்கு கருத்துருவாக்கத்தைச் செய்தது கூட்டமைப்புத்தான். அதன் விளைவாக ஏற்பட்டதே 30/1ஐநாத்தீர்மானம். அது நிலைமாறுகால நீதிக்கானது. நிலைமாறுகால நீதி எனப்படுவது நடைமுறையில் பொறுப்புக் கூறல் தான். எனவே கடந்த ஆறு ஆண்டுகளாக ஐநாவில்பொறுப்புக்கூறும் ஒரு பொறிமுறைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு விகிதமளவுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறது.
ஆனால் இப்பொழுது பொறுப்புக்கூறலுகான அதாவது நிலைமாறு காலநீதிக்கான ஐநாவின் செயற்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதை அக்கட்சி ஏற்றுக்கொள்கிறது. இது விடயத்தில் அரசாங்கத்துக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் தாம் ஒரு வாய்ப்பை வழங்கியிருந்த போதிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்மக்கள் திருப்திப்படக்கூடிய ஒரு பொருத்தமான விளைவு இன்று வரையிலும் ஏற்படவில்லை என்று அக்கட்சி கருதுகிறது. எனவே இது விடயத்தில்அரசாங்கத்தை மேலும் இறுக்கிப் பிடிக்கும் விதத்தில் ஜெனிவா தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி கருதுவதாக தெரிகிறது. எனினும் ஜெனிவாவைக் கடந்து எனைய அரங்குகளுக்குப்போவது தொடர்பில் அக்கட்சியிடம்இலட்சியப்பற்றுமிக்க பார்வைகள் இருப்பதாக தெரியவில்லை.
அக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் ஜெனிவாவை கடந்து போக வேண்டும் என்றும் அனைத்துலகநீதிமன்றங்களை நோக்கி போக வேண்டும் என்றும் கூறிக்கொண்டாலும் கூட அதற்கு அடிப்படையான வரையறைகள் உண்டு என்றும் கூறிவருகிறார். ஜெனிவாவுக்குள் மட்டும் நிற்பதனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காதுஎன்பதனையும் அவர் ஆங்காங்கே ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஜெனிவாவை விட்டு வெளியேறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த விவகாரத்தை ஐநாவின் ஏனைய அரங்குகளுக்கும் அனைத்துலக நீதிமன்றங்களுக்கும் எப்படி கொண்டு போகலாம் என்பது குறித்தும் அக்கட்சி விசுவாசமாக செயற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஜெனிவாவை ஏதோ ஒரு விதத்தில் என்கேஜ் பண்ணவேண்டும் என்று அக்கட்சி சிந்திப்பதாக தெரிகிறது.
அதேசமயம் அக்கட்சிக்குஉள்ளேயே வேறு நிலைப்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக உள்ள டெலோ இயக்கம் புளெட் இயக்கம் போன்றன தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தை விரும்பவில்லை என்று தெரிகிறது. தவிர இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் காரணமாக மாவை சேனாதிராஜா அணி சுமந்திரனின் நிலைப்பாட்டை முழு அளவுக்கு ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. எனவே இது விடயத்தில் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவமும் பல துருவப்பட்டு நிற்கிறது. இது முதலாவது.
இரண்டாவது நிலைப்பாடு- விக்னேஸ்வரன். அவரும் ஜெனிவாவுக்கு வெளியே போகவேண்டும் என்றுதான் கேட்கிறார். குறிப்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்; அனைத்துலக நீதிமன்றம்; சிறப்புத்தீர்ப்பாயங்கள் போன்றவற்றை நோக்கிப் போகவேண்டும் என்று அவரும் நம்புகிறார். ஆனாலும் ஜெனிவாவை ஒரேயடியாக முறித்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்று அவர் சிந்திப்பதாக தெரியவில்லை. அவருடைய கட்சிக்கூட்டுக்குள் அங்கம் வகிக்கும் சிவாஜிலிங்கம் கூறுகிறார் யாரையாவது உதைப்பது என்றால் ஒரு காலை ஊன்ற வேண்டும், இரண்டு கால்களாலும்உதைய முடியாது எனவே ஜெனிவாவில் காலை ஊன்றி அடுத்த கட்டத்துக்குப்பாய வேண்டும் என்று.
மூன்றாவது நிலைப்பாடு கஜேந்திரகுமாருடையது.அவருடைய கட்சி ஜெனிவாவுக்குள்ளிருந்து பொறுப்புக் கூறும் பொறிமுறையை வெளியே எடுக்க வேண்டும் என்று கேட்கின்றது. அடுத்த கட்டமாகஅனைத்துலகநீதிமன்றங்கள்; சிறப்புத்தீர்ப்பாயங்களிடம் சென்று நீதி கேட்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறுகிறது. இந்த விடயத்தை அக்கட்சி இப்போதுதான் கூறுகிறது என்பதல்ல. பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூறிவருகிறது. எனவே ஜெனிவாவிற்குள் தொடர்ந்தும் பெட்டி கட்டப்பட்டிருப்பதை அக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஜெனிவாவில் தொடர்ந்தும் என்கேஜ்பண்ணுவதில் பயனில்லை என்று அக்கட்சி கூறுகிறது. அப்படியென்றால் ஜெனிவா தீர்மானங்களை அக்கட்சி ஏற்கவில்லை என்பதுதான் அதன் சாராம்சம்.
மேற்கண்ட மூன்று நிலைப்பாடுகளையும்தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. மூன்று கட்சிகளுமேஜெனிவா போதாது ஜெனிவாவைகடக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால்விகித வேறுபாடு உண்டு. இது விடயத்தில் கூட்டமைப்பு இணைக குழு நாடுகளின் அபிப்பிராயங்களை அதிகம் மதிக்க வேண்டும் என்று கருதுகிறது. இணைக குழுநாடுகளை புறந்தள்ளிவிட்டு அரசியல் செய்ய முடியாது என்றும் நம்புவதாக தெரிகிறது. எனவே உலக யதார்த்த தோடு ஏதோ ஒரு விகிதம் அளவுக்கு சுதாகரித்துக் கொள்ள அக்கட்சி திட்டமிடுகிறது. விக்னேஸ்வரனின் தரப்பு ஒரு நடுவழியைக் கடைப் பிடிக்கிறது. கஜேந்திரகுமாரின் அணி ஜெனிவாவைக் கடந்து போக வேண்டும் என்று இறுக்கமான நிலைப்பாட்டோடு காணப்படுகிறது.
இதுவிவகாரத்தில்புலம்பெயர்ந்ததரப்புக்கள்மத்தியிலும் வேறுபட்ட நிலைப்பாடுகளை காணமுடிகிறது. ஒருதரப்பு இணைககுழு நாடுகளோடு ஏதோ ஒரு விகிதமளவுக்கு சுதாகரிக்கக் கேட்கின்றது. வேறு சில தரப்புக்கள்ஜெனிவாவை நிராகரிப்பதாக தெரிகிறது. அனைத்துலக நீதிமன்றங்களை நோக்கியும் அனைத்துலக நீதிமன்றங்கள் விசேஷ தீர்ப்பாயங்களை நோக்கியும் போகவேண்டும் என்று அத்தரப்புக்கள் நம்புகின்றன. எனவே தொகுத்துப் பார்த்தால் தாயகத்திலும் புலம் பெயர்ந்த தமிழ்ப்பரப்பிலும் தமிழ்த் தரப்பு எனப்படுவது பல்வேறு நிலைப்பாடுகளோடு காணப்படுகிறது. இந்நிலைப்பாடுகள் அனைத்தையும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தால் மட்டுமே ஜெனிவாவை நோக்கித் தமிழ்த்தரப்பை ஒன்றிணைக்கலாம். இல்லையென்றால் இம்முறையும் தனித்தனி ஓட்டங்களுக்குக்கான வாய்ப்புக்களே அதிகமாகும். இதை இன்னும் தெளிவாக பின்வருமாறு கேட்கலாம்… .தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரண்டு நிற்கிறார்கள் என்பதனை ஜெனிவாவில் வெளிக்காட்டக் கிடைத்திருக்கும் வாய்ப்பை தமிழ் தரப்புக்கள் இம்முறை எப்படிக்கையாளப் போகின்றன ?