(மன்னார் நிருபர்)
(19-01-2021)
மன்னார் மடு பொலிஸ் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி, வெடி மருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற நிலையில் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்ட போது, நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து மற்றும் பன்றி இறைச்சியுடன் வாகனத்தில் பயணித்த 34 மற்றும் 52 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.