மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
(மன்னார் நிருபர்)
(21-01-2021)
மன்னார் மாவட்டத்தில் உள்ள மதஸ்தலங்களில் மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை பின் பற்றி மாவட்டத்தில் உள்ள மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் பொறுப்பாக உள்ள மத தலைவர்களை அழைத்து விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை(21) காலை மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த விசேட கலந்துரையாடலில் மதத்தலைவர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உற்பட அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று நிலமையை கவனத்தில் கொண்டு இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டத்தில் பொறுப்பாக உள்ள மத தலைவர்களை அழைத்து விசேட கலந்துரையாடலை நடாத்தி இருந்தோம்.
குறிப்பாக மாவட்டத்தில் உள்ள சகல மதஸ்தலங்களிலும் மத கடமையில் ஈடுபடும் போது மக்கள் சுகாதார நடை முறைகளை பின் பற்ற வேண்டும் என்று கண்டிப்பான அறிவித்தலை வழங்கி உள்ளோம்.
மதஸ்தலங்களில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் போது கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது.
எனவே ஒவ்வொரு மதங்களிலும் அவர்களுடைய மதஸ்தலங்களில் பின் பற்றப்படுகின்ற முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம்.
தற்போதைய கொரோனா சூழ்நிலையில் எவற்றை நாங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விடையங்களையும் மத தலைவர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
அதற்கான அறிவித்தல்களை மத தலைவர்கள் தமது மதஸ்தலங்களில் மக்களுக்கு தெரியப்படுத்த உள்ளனர்.
மத தலைவர்கள் தமது பூரண ஒத்துழைப்பையும் எமக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் கொரோனா தொற்றில் இருந்து எமது மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.