கொலைக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் தொடர்ந்து சிறைக்குள் இருந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சத்தமிட்டுப் பேசி வந்த வியாழேந்திரன் அவர்கள் பிள்ளையான் சிறையிலிருந்து மீண்ட பின்னர் சத்தமிட்டு பேசுவதைக் குறைத்திருந்ததாகவும் . ஆனால் தற்போது அமர்க்களமாக பேசத் தொடங்கியுள்ளதாகவும் கிழக்கிலிரு;நது கிடைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சராக விளங்கும் வியாழேந்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து மகிந்த பக்க அரசியலுக்குத் தாவியவர். பின்னர் கோட்டாபாயவின் ஆட்சியின் ஆரம்பத்தில் தபால் தந்தி தொடர்புகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார். அந்த நாட்களில் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் செயற்பட்டு வந்த அவர் பிள்ளையானின் வருகைக்குப் பின்னர் சற்று அடங்கியே இருந்ததாகவும், ஆனால் தற்போது, அரசாங்கத்திற்கு உசுப்பேத்தும் வகையில் சம்பந்தம் இல்லாத வகையில் பல இடங்களில் கருத்துக்களைக் கூறி வருவதாகவும் மேற்படி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு உதாரணமாக சில விடயங்களை அங்குள்ள இளைஞர்கள் சில தொகுத்து எழுதியுள்ளனர்.
மாவீர நாளில் முகப் புத்தகங்களின் பதிவிட்டவர்கள் சிறையில் உள்ளார்கள். இவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அரசாங்க பாதுகாப்புடன் திரிகின்றார்கள். ஆனால் இவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் சிறைச்சாலை சென்று வருகின்றார்கள். இப்போது இருக்கும் தலைமுறையாவது நிம்மதியாக சந்தோசமாக இழப்புக்களை சந்திக்காமல் வாழ வேண்டும் என எஸ்.வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளதைப் பார்க்க சிரிப்பு வருகின்றது எனென்றால் இவரும் முன்னர் அங்குள்ள இளைஞர்களுக்கு உசுப்பேத்தியவர் தான்..
இன்னொரு கூட்டத்தில் வியாழேந்திரன் பேசுகையில் ”மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் வறுமையை இல்லாது ஒழிக்க முடியும். தமிழ் மக்களுடைய கண்ணீரையும், பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு காலா காலமாக தமிழ் மக்களின் கல்லறைகளில் நின்று கொண்டு செய்கின்ற பிழைப்புவாத அரசியலை வங்குரோத்து அரசியலை நாங்கள் தொடர்ந்து செய்ய முடியாது.
ஆகவே மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவர் தான் அந்த மக்கள் தலைவனாக இருக்க முடியும். தேர்தல் காலங்களில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். முப்பது வருடம் இடம்பெற்ற யுத்தத்தின் இழப்பை நான்கு மாதத்தில் நிறைவு செய்ய முடியாது. நாங்கள் கட்டம் கட்டமாக வேலைத் திட்டங்களை செய்து முடிப்போம். தமிழ் தேசியம் தடம் மாறலாம். ஆனால் தடம் புறளக்கூடாது. சாத்வீக போராட்டம், ஆயுதம் போராட்டம் இடம்பெற்றது.
தற்போது அரசியல் போராட்டம் உள்ளது. இந்த போராட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். பல பிரச்சினைக்கு மத்தியில் வாழ்ந்த எமது தமிழ் சமூகத்தினை மீண்டும் பிரச்சினைக்குள் மாட்டி விடுகின்ற வேலைத் திட்டத்தினை செய்ய முடியாது” என்றார்
மேலும் அவர் பேசுகையில் “இப்போது இருக்கும் தலைமுறையாவது நிம்மதியாக சந்தோசமாக இழப்புக்களை சந்திக்காமல் வாழ வேண்டும். 2009ஆம் ஆண்டு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் மக்களுக்காக போராடவுமில்லை. ஆயுத களத்தில் இறங்கவுமில்லை. அவர்கள் குடும்பத்தோடு மாறிவிட்டார்கள். இன்று உசுப்பேத்துகின்ற, உணர்ச்சி வசப்படுத்துகின்ற அரசியலை செய்ய முடியாது. அது எமது சமூகத்தினை பாதிக்கும்” என்று அவரும் உசுப்பேத்துகின்ற முறையிலே பேசிவருகின்றார் என்று மேற்படி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.