(02-03-2021)
(மன்னார் நிருபர்)
தேசிய ரீதியாக நடை பெறும் கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் தலைமன்னார் பியர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் கிராமிய மைதானம் அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை வைபவரீதியாக அடிக்கல் நட்டி வைக்கப்பட்டது.
நாட்டின் சகல பிரதேசத்திலும் சுபிட்சத்தை நோக்கிய வேளைத் திட்டத்திற்கு அமைவாக கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் ஊடாக 332 பிரதேச பிரிவுகளில் குறித்த விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
தலைமன்னார் பியர் கிழக்கு மைதானத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் , மன்னார் பிரதேச செயலாளர் , மாவட்ட திட்டமிடல் அதிகாரி , மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் , மாவட்ட பிரதம கணக்காளர் , உட்பட கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் விளையாட்டு கழக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.