(மன்னார் நிருபர்)
(10-03-2021)
மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாவனைக்காக வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் கொண்டு வந்துள்ளார்.
மக்களும், மீனவர்களும் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னாரில் அமைந்துள்ள தேசிய உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இன்றைய தினம் புதன் கிழமை(10) மாலை நேரடியாக சென்ற அரசாங்க அதிபர் குறித்த கோரிக்கையை முன் வைத்தார்.
இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் அதிகமானவர்கள் மீனவர்களாக காணப்படுவதோடு, மீன்களை பதனிட்டு கருவாடாக்கி சந்தைப்படுத்தி வருகின்றனர். மன்னாரில் அமைந்துள்ள தேசிய உப்பு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கொள்வனவு செய்து கருவாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கருவாட்டிற்கு வெளி மாவட்டங்களிலும்,வெளி நாடுகளிலும் மதிப்பு உள்ளது.அதற்கு காரணம் மன்னாரில் உள்ள தரமான உப்பு காரணமாக உள்ளது.
எனினும் தற்போது மன்னாரில் அமைந்துள்ள தேசிய உப்பு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்யப்படாமல் வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால் புத்தளம் மற்றும் ஆணையிரவு போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டுகின்ற தரம் குறைந்த உப்பினை மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக புத்தளத்தில் இருந்து மிகவும் தரம் குறைந்த உப்பை மன்னாரிற்கு கொண்டு வந்து மக்களுக்கு பாவனைக்காக வினியோகிக்கின்றனர்.இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த விடையம் தொடர்பாக மக்களும்,மீனவர்களும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் இன்று புதன் கிழமை(10) மாலை மன்னாரில் அமைந்துள்ள தேசிய உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாவனைக்காக வழங்க துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தார்.
மேலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் கவனத்திற்கு குறித்த விடையம் தொடர்பாக அரசாங்க அதிபர் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் மிக விரைவில் மன்னாரில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மன்னார் மாவட்ட மக்களின் பாவனைக்காக வினியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு தேவையான அளவு உப்பை வழங்கவும் அரசாங்க அதிபரின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.