(மன்னார் நிருபர்)
(13-03-2021)
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் சௌபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘நீர்ப்பாசன செழிப்பு’ எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஊமையார் துவரம் குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை (13) காலை இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஊமையார் துவரம் குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் சூமஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ. ஸ்ரான்லி டிமேல், மடுப் பிரதேச செயலாளர் , மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர், விவசாய உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக சுமார் 8.6 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறித்த வேலைத் திட்டத்தின் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வேலைத் திட்டத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.