மன்னார் நிருபர்
(14-04-2021)
தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறி இளைஞர்கள் நால்வர் வாகனத்தில் பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோன்ற சம்பவமொன்று தற்போது மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறி நால்வர் காரின் யன்னல்கள் வழியாக அமர்ந்து, விநோதமாக சென்ற நிலையில் குறித்த நால்வரையும் கண்டறியும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் தென்னிலங்கை பதிவைக்கொண்ட WP-CAC 9100 என்ற இலக்கமுடைய காரொன்று பயணித்த நிலையில் குறித்த காரின் ஜன்னல்கள் வழியாக இரண்டு சிறுமிகள் அமர்ந்து பயணித்துள்ளனர்.
இதனை அவ்வழியாக சென்ற ஊடகவியலாளர் ஒருவர் அவதானித்ததுடன் புகைப்படம் எடுத்து, மன்னார் பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில், உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.