(மன்னார் நிருபர்)
04-15-2021
மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 13ஆம் திகதி இரவு நேரத்தில் நாச்சிகுடா வளைப்பாடு எல்லை பகுதியில் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடற்படையினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணம் மற்றும் ஒரு தொலை பேசியையும் கடற்படையினர் எடுத்து சென்றுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை(15) நேரில் சந்தித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்
கலந்துரையாடி உள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
கடற்படையினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மன்னான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு அச்சப்படுகின்றனர்.
தாக்குதலை மேற்கொண்ட கடற்படையினர் முறைப்பாடு செய்ய வேண்டாம் என குறித்த மீனவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தாகவும் தெரிவித்தனர்.
குறித்த மீனவர்கள் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து இரவு 10 மணியளவில் பள்ளிமுனை கடற்படையிடம். உரிய முறையில் பதிவுகளை மேற்கொண்டு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் வளைப்பாடு நாச்சிகுடா கடல் எல்லையை அண்மித்த பகுதியில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இன்றைய (15) தினம் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரடியாக சென்று பார்த்த பொழுது மீனவர்களை மிகவும் கேவலப்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றனர்.
தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த ஒரு காரணமும் கடற்படையால் மீனவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் அவர்களிடம் இருந்த தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளனர்.
அதே நேரம் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்ட சமயத்தில் அங்கிருந்த மீனவர்கள் தாக்குதலை வீடியோ பதிவு செய்து விடக்கூடது என்பதற்காக அனைத்து தொலைபேசிகளையும் பறித்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் கடற்தொழில் திணைக்களத்திடம் வினவியதாகவும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தற்பொது விடுமுறையில் இருப்பதாகவும் இது தொடர்பாக தான் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே நேரம் கடற்றொழில் அமைச்சரிடமும் குறித்த விடயம் தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் குறித்த மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி வேண்டும் என கோரியதாகவும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவனந்தா தெரிவித்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் இலங்கையின் படை தரப்புக்கள் அனைத்து தமிழ் மக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் அச்சுறுத்தி தமிழ் மக்களின் குரலை ஒடுக்குகின்ற செயற்பாடுகளை தொடர்சியாக முன்னெடுத்து வருவதாகவும் அந்த வகையில் இந்த மீனவர்கள் மீதான தாக்குதலும் இடம் பெற்றுள்ளதாககவும் இதே பேன்று ஒரு அச்சுறுத்தல் மத்தியிலேயே தமிழ் மக்கள் வாழ வேண்டிய ஒரு சூழ் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.