யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ஒரு பதவியை மட்டுமே தனக்காக்கிக் கொண்ட மாவை சேனாதிராஜா ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழர் அரசியல் பாதையில் பாதம் பதித்து நடந்து வருபவர் என்பதை அறியாதவர்கள் தமிழர் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அடங்குபவர்கள் மத்தியில் இருக்க மாட்டார்கள். தமிழ் இளைஞர் பேரவை தொடக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணி போன்ற பல அமைப்புக்களில் அவர் தொடர்ச்சியாக பங்களித்து வந்ததால் சில ஆண்டுகள் இலங்கையின் கொடிய சிறைகளிலும் அடைபட்டுக்கிடந்தார்.
பின்னர் அமிர்தலிங்கம் அவர்கள் மறைவிற்குப் பின்னர் பாராளுமன்ற அங்கத்தவராக பதவி வகிக்கும் சந்தர்ப்பம் அவரை நாடி வந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இலங்கைப் பாராளுமன்றத்தின் அங்கத்தவராக பதவி வகித்தபடியால் தொடர்ச்சியாக சகல வசதிகளையும் சலுகைகளையும் அதிகார பலத்தையும் கொண்டவராக விளங்கினார். அவருடைய வாழ்க்கை எவ்வித இடையூறுகயும் இன்றி கழிந்தது.
நாளடைவில் பண பலம் தங்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தாங்கள் தவறு செய்கின்றோம் என்பதை மறந்து செயற்படத் தொடங்கினார்கள். இதனால் மாறி மாறி வந்த ரணில் அரசாங்கம் , மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போன்றவற்றினால் பண ” ஆசை” காட்டப்பட்டு விலை போன அரசியல்வாதிகளுள் மாவை சேனாதிராஜா போன்ற சிலர், சிங்கள முதலாளித்துவ ஆட்சியாளர்களின் பெருந்தொகைப் பணத்திற்கு ‘விலை” போனவர்களாக மாறியிருந்தார்கள்.
அவ்வாறானவர்களும் நன்கு காட்சிப் படுத்தப்பட்ட ஒருவராக ‘மாவை’ அவர்கள் விளங்கியதால், கடந்த பொதுத் தேர்தலில் அவர்; தோல்வியைத் தழுவ நேரிட்டது.
எனினும் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஒரு ‘ஆசை” நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. அதுதான் வடக்கு முதலமைச்சர் பதவி. கடந்த சிலவருடங்களாக அவர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க உறுப்பினர்கள் என அனைரோடும் உரையாடும் சந்தர்ப்பங்களில் ” நான் கடைசியாக ஒருக்கால் வடக்கு முதலமைச்சராக இருந்திட்டுப் போக ஆசைப்படுகின்றேன்” என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது திரு மாவை சேனாதிராஜாவின் இருப்பு கீழ் நோக்கி நகர ஆரம்பித்து விட்டது. அவர்கள் தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பல அங்கத்தவர்களால் ‘ஒதுக்கப்பட்டவராகவே’ காணப்படுகின்றார். அதனால் கடந்த சில மாதங்களாக “என்க்கு முதலமைச்சர் பதவி’ என்பது எட்டாத கனியா?” என்று தன்னிடமே கேட்கத் தொடங்கியுள்ளதாகவும் அவரோடு நெருங்கிப் பழகுகின்றவர்களின் கருத்துப் பரிமாற்றங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வாறன இக்கட்டான நிலையில் உள்ள மாவை சேனாதிராஜா அவர்கள் அண்மையில் முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு கல்விமானை அடுத்த முதலமைச்சர் தேர்தல் வேட்பாளராக கொண்டு வர சுமந்திரன் எம்.பி அவர்கள் முயற்சி செய்வதை அறிந்து மனம் நொந்து போய் அறிக்கைகளும் விட்டுக்கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களும் இன்னொரு தகுதியான ஒருவரை முதலமைச்சர் பதவிக்கு பொது வேட்பாளராக நிறுத்துவோம் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பும் மாவை அவர்களுக்கு ‘காய்ச்சிய இரும்பை கையால் பிடித்தது ‘ போல் இருந்தது என்று கட்சி உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இவ்வாறான நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் மட்டக்களப்பில் அமைந்துள்ள .ஊடக மையத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ள கருத்துக்கள் ஊடகங்களில் முதன்மைச் செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தச் செய்தி மாவை சேனாதிராஜா அவர்களையும் நிச்சயம் பாதித்திருக்கும் என்பது நிச்சயம் என்றே யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் உணர்ந்த்திருப்பதும் உறுதியான ஒன்றே..
மட்டு.ஊடக அமையத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாணசபை தேர்தல் தொடர்பாக இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சமகால அரசியலிலே மிக முக்கியமான பிரச்சனையாக தமிழ் அரசியல்வாதிகளின் மத்தியிலும்,முஸ்லிம் அரசியவாதிகளின் மத்தியில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்ட விடயம் இப்போதும் பேசும்பொருளாகவும்,மிகவும் சூடாகவும் பேசப்பட்டிருந்தமை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கடந்த வாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக தரம் குறைத்து பெயர் மாற்றி சமல் ராஜபக்ஷவின் அமைச்சின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டமையை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.
நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துள்ளோம் என்றும்,கிழக்கிலே தமிழர்,முஸ்லிம்கள் ஒற்றுமைப்படக்கூடாது என்பதற்காகவும்,கிழக்கில் தமிழர்களின் இருப்பு பறிமுதல் செய்யப்படுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் என பேசியவர்கள் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதற்கு அப்பிரச்சனை சம்பந்தமாக பேசாமல் இருப்பது கவலையளிக்கின்றது.இவ்வாறான அரசியல்வாதிகளை கல்முனை மக்களும்,அம்பாறை மாவட்ட மக்களும் இனியும் நம்பி ஏமாறக்கூடாது என்பதை தெரியப்படுத்துகின்றேன்.
ஆனால் இன்று நாட்டிலே பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகளில் தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும்,சமாதானமாகவும் செயற்படுகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களும்,முஸ்லிம்மக்களும் ஒற்றுமையாக செயற்படுவதை அவதானித்த ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும்,முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து தங்களின் குறுகியகால அரசியலுக்காகவும்,தங்களின் அரசியல் வியாபாரத்திற்காகவும், அரசியல் இருப்பு வீழ்ச்சி காணும் என்பதற்காவும் எடுத்த நடவடிக்கைதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைத்து அனுப்பட்ட கடிதமாகும்.இவ்விடயமாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்துள்ளேன்.
மாகாணசபை தேர்தல் நடப்பதற்கான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் இணைப்பாக உள்ள தமிழ்த் தேசியம் என்பதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளை ஒரே தளத்தில் நின்று தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக வடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில் நான் போட்டியிடுவேன்” என்றார். சாணக்கியன் ‘ M.P.
எதற்கும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கையில் மாகாண சபைகள் தேர்தல்கள்கள் எப்போது நடைபெறுகின்றது என்பதை அறிந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு சாணக்கியன் ‘மாவை” போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் அடுத்த கட்டம் பற்றி யோசிக்க முடியும்..