தற்போது உலகெங்கும் தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்பெற்று வரும் மே 18 இனப்படுகொலை நாட்களை மனதில் நிறுத்தும் வண்ணம், முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு நேரடியாகச் சென்று கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களை தமிழ் மக்கள் பாராட்டியுள்ளார்கள்.
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைந்து முள்ளிவாய்க்காலில் ஆண்டு தோறும் மே 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை வலியுறுத்தி மே 12 முதல் மே 18வரை இனப்படுகொலை வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 நிலைமைகள் காரணமாக நினைவேந்தல் வாரத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டனர் .