(மன்னார் நிருபர்)
(19-05-2021)
மன்னார் தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்துக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மாலை விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல்,மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.பிரதீப், மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கே. திலிபன் உற்பட வைத்தியர்கள் ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன் போது குறித்த கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.
தற்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையினால் கூடுதலான பெண்கள் தொற்றுக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு பெண்களுக்கான சிகிச்சை நிலையமாக இயங்க குறித்த கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம் கியங்க உள்ளது.
ஒரே நேரத்தில் நூறு நபர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று புதன் கிழமை (19) முதல் மன்னார் தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் பெண் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.