மன்னார் நிருபர்
(11-06-2021)
சுகாதார தொழிற்சங்கத்தின் ஒன்றியம் மற்றும் மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் இணைந்து 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை(11) காலை மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இம்மாதம் 03 ஆம் திகதி தங்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் போது முன்வைத்த கோரிக்கைகள் இது வரை நிறைவேற்றப்படவில்லை எனவும் இலங்கையினுடைய சுகாதார அமைச்சுக்கு தாங்கள் முன் வைத்த கோரிக்கைகளான கொவிட்-19 தொற்று நோய் தொடர்பான முடிவெடுத்தலில் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவையும் இணைத்தல் , வைத்திய சாலை பணிக்குழுவினருக்கு தங்கு தடையின்றி பொதிய அளவு சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் , வைத்திய சாலையில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாட்டு குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைத்து கொள்ள வேண்டும்.
பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைய கர்பிணி சுகாதார துறைசார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறைக்கான சுற்று நிருபம் வெளியிடப்பட வேண்டும், பயணத் தடை காலத்தில் சுகாதாரதுறை சார் பணிக்குழுவினருக்கு விசேட போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அனைத்து பணிக் குழு வெற்றிடங்களையும் நிறப்ப வேண்டும்.
கொவிட் தடுப்பூசி இது வரை ஏற்றாத பணிகுழுவினருக்கு உடனடியாக ஏற்ற வேண்டும் போன்ற 14 அம்சக் கோரிக்கைகளுக்கு தங்கள் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்தும் அமைச்சு எங்களை உதாசீனம் செய்வதை அறியக்கூடியதாக உள்ளதாகவும் இந்த நிலையிலே ஐந்து தொழில் சங்கங்கள் இணைந்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த போராட்டம் தொடர வேண்டுமா? இல்லை? இன்றுடன் முடிவடைய வேண்டுமா? என்பது இலங்கையில் சுகாதார திணைக்களத்தின் முடிவிலே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களுடைய கோரிக்கைகளை உதாசீனம் செய்யாமல் தங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது என்பதை நினைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார்கள் என நம்புகின்றோம் எனவும் அவ்வாறு நிறைவேற்றி தராத பட்சத்தில் எதிர் வரும் சில தினங்களில் ஐந்து தொழிற்சங்கங்களும் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த போராட்டம் காரணமாக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.