மன்னார் நிருபர்
(12-06-2021)
கடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில்
க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் அந் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்பதற்கும், தங்களது உறவினர்கள் இலண்டன்,கனடா, சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட நாடுகளில் தங்கி இருப்பதால் அவர்களுடன் சேர்ந்து வாழ வெளி நாடுகளுக்கு தப்பிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
“கொரோனா” தடுப்பு நடவடிக்கை காரணமாக இலங்கை அரசு விமான போக்குவரத்தை இரத்துச் செய்ததுடன் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
இதனால் அந் நாட்டு மக்கள் வெளி நாடுகளுக்கு செல்ல முடியாத சூழ் நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு அருகே தமிழ் நாடு உள்ளதால் கடல் வழியாக தமிழகம் வந்து தமிழகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27ஆம் திகதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபதுறையிலிருந்து 24 ஆண்கள் , இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் படகு மூலம் கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
தூத்துக்குடி வந்த 27 பேரும் மதுரையில் தங்கி அங்கிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 27 பேரையும் மதுரையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 27 பேரும் கடவுச் சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.