யாழ். நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேட்டு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் இரண்டு தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளை மிக மோசமாகத் தாக்கி சித்திரவதை செய்த சம்பவங்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்று முன் தினம் தந்தை ஒருவர் தனது 06 வயது, 10 வயதுடைய பிள்ளைகள் மற்றும் மனைவி மீது கண்மூடித்தன மான தாக்குதல் நடத்தியதுடன் 10 வயதுப் பிள்ளையை காலில் கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் தலைகீழாக கட்டி இறக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் பின்னர் குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறியதை அடுத்து அயலவர்கள் இணைந்து குறித்த பிள்ளையை கிணற்றிலிருந்து மீட்டதுடன் தாய், பிள்ளைகளை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இதனை அடுத்து சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த நபர் முதல் நாள் இரவு போதையில் வந்ததாகவும் மறு நாள் வீட்டிலிருந்த 400 ரூபாவைக் காணவில்லை என்று தெரிவித்தே மனைவி மீதும் பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றுக் காலை மற்றொரு கணவன், தனது மனைவியின் தாயாரின் கைத்தொலைபேசியைத் திருடி எடுத்துச் சென்று விற்றுவிட்டு போதைப்பொருள் பாவித்துவிட்டு வந்து மனைவி மற்றும் ஆறு மாதக் குழந்தை மீது கண்மூடித்த னமான தாக்குதல் நடத்திய தாகவும் சம்பவத்தில் ஆறு மாதக் குழந்தையின் உதடு உடைந்து காயமடைந்துள்ளதாகவும் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த குடியிருப்புப் பகுதிகளில் பல்வேறு சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசஅதிகாரிகள் திணறிவருவதால் சட்டத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுத்து அந்தக் கிராமத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.