(மன்னார் நிருபர்)
(10-07-2021)
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை(10) காலை தொடக்கம் ‘பைசர்'(—-)கொரோனா தடுப்பூசி செலுத்தும் 2 ஆம் நாள் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த கிராமங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
குறிப்பாக இன்றைய தினம் சனிக்கிழமை (10) நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த வங்காலை, அச்சங்குளம், நறுவலிக்குளம், வஞ்சியங் குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தலைமையில் வங்காலை புனித ஆனால் ஆலய வளாகத்தில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அதே நேரம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன் டெனி தலைமையில் அரிப்பு, சிலாவத்துறை, முத்தரிப்புதுறை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்திற்கு என சுமார் 20 ஆயிரம் ‘பைசர்’ தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் 2 ஆம் கட்டமாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி, உற்பட சுகாதார துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது.