இலங்கையில் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் தொடர்ந்து அங்கு வாழ முடியாத நிலை தோன்றும் என்று எண்ணியுள்ள பெரும்பான்மையின கல்வியாளர்களும் வர்த்தகர்களும் இலங்கையிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய கோட்டாபாய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 600,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறிப்பாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகர் அலுவலகங்கள் ஆகியவற்றை நாடிச் செல்வதாகவும் அங்கு தங்களுக்கான விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக அறியப்ப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் இலங்கையின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இது தொடர்பான தகவல்கள் வெளிநாட்டு தூதரங்களில் பணியாற்றும் இலங்கையர்களால் கசியப்பெற்றுள்ள இந்த நேரத்தில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போது, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனா இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்;, “விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் சதவீதம் அண்மைய காலங்களில் மிகப் பெரிய அளவில் அதிகரித்ததுள்ளமை இதுவே முதல் முறையாகும். முன்னர் இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் யுத்தம் காரணமாகவும் இராணுவு கெடுபிடிகள் காரணமாகவும் வெளிநாடுகளை நாடிச் சென்றார்கள் தற்போது பெரும்பான்மை இன மக்கள் இவ்வாறு விரும்புகின்றார்கள். அவர்களில் விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோர் சிங்கள பௌத்தர்கள் என்பதும், அறிஞர்கள், கல்வியாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் தொழில் வல்லுநர்கள் இதில் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசா வழங்கல் சேவைகளால் உறுதிப்படுத்தப்பட்டபடி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளன என்பதும் தற்போது கசிந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் “ அரசாங்கம் நிலையான ஒரு ஆட்சியை நடத்தவில்லை. இதனால் இதுபோன்ற நிலைமை நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனா கூறினார்.