வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இ. கண்ணன் அவர்களின் முன்னிலையில் நேற்று 30ம் திகதி எடுக்கப்பட்ட வழக்கொன்றில் மேலதிக சாட்சிகள் இன்மையால் வழக்கை நிறுத்திக்கொள்வதாக அரச சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ருந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் நுண்கலைத் துறை சார்ந்த விரிவுரையாளர் கண்ணதாசன் அத்தனை குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து முற்றாக விடுதலை செய்யும் வகையில் நீதிபதி உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கு விபரங்களை அனுப்பி வைத்துள்ள எமது செய்தியாளர் தனது குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டுனான வழக்கிலிருந்து யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆட்களைக் கடத்தினாரென்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நடைபெற்று வந்ததையடுத்து 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்தது.
தற்போது மேற்படி யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார் என்பதை அறிந்த அவரது உறவினர்கள் குடும்பத்தினர் மற்றும் ந ண்பர்கள் அனைவரும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டனர்.