(மன்னார் நிருபர்)
(21-09-2021)
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை புது வெளி பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடி பகுதியில் தற்போது கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோரி முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியில் பாலர் பாடசாலை, பள்ளிவாசல், மையவாடி போன்றவை அமைந்துள்ளது.
எனினும் மையவாடிக்கு என ஒதுக்கப்பட்ட காணிக்குள் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கும் நடவடிக்கைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும்,உரிய அதிகாரிகள் குறித்த விளையாட்டு மைதானத்தை குறித்த மையவாடி பகுதியில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
-எனவே குறித்த விளையாட்டு மைதானம் மையவாடி பகுதியில் அமைக் கப்படுவதை நிறுத்தி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். என முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
-குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் ஐ தொடர்பு கொண்டு வினவிய போது,,,
-குறித்த விடயம் தொடர்பாக முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, மையவாடி பகுதியில் அமைக்கப்படவுள்ள கரப்பந்தாட்ட மைதான பணியை நிறுத்தி வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
-இவ்விடயம் தொடர்பாக முசலி பிரதேசச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்த தோடு, ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.