(மன்னார் நிருபர்)
(23-09-2021)
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை புது வெளி பகுதியில் உள்ள மையவாடி பகுதியில் உரிய அனுமதியுடன் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.ரஜீவ் தெரிவித்தார்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை புது வெளி பகுதியில் உள்ள மையவாடி பகுதியில் தற்போது கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோரி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் புது வெளி கிராமத்தில் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க புது வெளி பள்ளி நிர்வாகம் 5 வருட ஒப்பந்த அடிப்படையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான 20 பேச் காணி புது வெளி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு மைதானம் அமைக்க வழங்கப்பட்டுள்ளதாக புது வெளி விளையாட்டு கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த விளையாட்டு மைதானம் அமைக்க முசலி பிரதேச செயலகம், முசலி பிரதேச சபை, புது வெளி விளையாட்டுக்கழகம், புது வெளி கிராம அபிவிருத்திச் சங்கம்,புது வெளி வடக்கு காதிருல் கபீர் ஜீம் ஆப்பள்ளி ஆகியவற்றின் அனுமதியுடன் பள்ளிவாயலுக்கு சொந்தமான 20 பேச் காணியில் குறித்த விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.