கால் நூற்றாண்டைக் கட்டி அணைப்பதற்கு முன்பே கதறி அழும் தமிழினத்தைக் காக்க தன் உயிரைத் துறந்த தியாகி திலீபனை தீபச் சுடராக எம் இதயத்தில் ஏற்போமாக!!!
மணிமுடி தாங்கிய மன்னர் சீரோடு சிறப்போடு ஆண்ட மண் நல்லூர். நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே? என்று கூறுமளவுக்கு நற்றமிழை வளர்ர்த்த நாவலர் பிறந்த மண்ணும் நல்லூரே. பித்தன்’ என்று பிறர் பேசும் பெருமானை நல்லூர்த் தேரடியில் கண்டேன்.என்றும் என்னை எனக்கறிவித்த என் குருநாதன் என்றும் நல்லூர்த் தேரடியில் வாழ்ந்த “விசர்ச் செல்லப்பனை கொழும்புத் துறை யோக சுவாமிகள் வாழ்த்துகின்றார். அப்படி அரசியலிலும் அருந்தமிழிலிலும் ஆன்மீகத்திலும் உச்சப் புகழ் அடைந்த நல்லூர் முருகன் வீதியில்தான் தியாகி திலீபன் சாகும்வரை உண்ணா நோன்பை 15.9.1987 ல் தொடங்கி 26.9..1987 ல் 12 நாட்கள் முடிவுறும் நிலையில் 265 மணித்தியாலங்கள் உள்ளடக்கிய போராட்டத்தை காலை 10:48 மணிக்கு ஈழத் தமிழகம் மட்டும்அல்ல தமிழ் கூறும் நல்லுலகமும் ஐயோ! என்று அலறும் நிலையில் தியாகி திலீபனின் இன்னுயிர் எமை விட்டுப் பிரிந்தது.
27 .11 .1963ல் கடைக்குட்டியாக யாழ்ப்பாணத்தில் ஊரெழுவில் தோன்றினார். இவர் பிறந்த பத்தாவது மாதத்திலேயே தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த இவர்
மருத்துவக் கல்லூரி மாணவனாக விளங்க பின்பு மருத்துவப் படிப்பைத் துறந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து யாழ் மாவட்டத்தின் அரசியலதுறைத் தலைவராக உயர்நிலை அடைந்தார். நான் முன்பு குறிப்பிட்டதற்கமைய 27.11.1963ல் தோன்றிய இவர் 15.9.1987ல் காலை 9:55க்கு நல்லூர் வடக்கு வீதியில்தான் தனது சாகும் வரை உண்ணா நோன்பைத் தொடங்கி 12 நாட்கள் முடிவுறும் நிலையில் தன் உயிரை விடுகிறார். இவர் உயிர்விடும் பொழுது இவருக்கு அகவை 24 ஆகும் கால் நூற்றாண்டு முடிவதற்கு முன்பே காலத்தால் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கும் புகழை இவர் ஈட்டியுள்ளார்.
அவர் மறைவதற்கு முன்பேயே 650 போராளிகள் களத்தில் தன் உயிரை மாய்த்தனர். அவ் உண்ணா நோன்பை மேற் கொள்வதற்கு முன்பு கரவெட்டியில்உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்ற முறையில் மில்லரின் உயிர் போகின்றது. மில்லர் தன் கடைசிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு திலீபனோடுதான் இருந்தார். திலீபனின் கூற்றின்படி “நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பது என்று எண்ணுகின்ற போது மகிழ்ச்சியடைகின்றேன் என்று மில்லர் கூறியதாக கூறும் இவர் மக்கள் விடுதலை அடையும் காட்சியை நான் காணமுடியவில்லை என்பது தனக்குக் கவலை என்று மில்லர் கூறியதாக இவர் குறிப்பிட்டுள்ளார். திலீபன் தன் உண்ணா நோன்பைத் தொடங்குவதற்கு முன்பு தலைவர் பிரபாகரனுடைய இசைவைப் பெற்றே இம் முடிவை எடுத்தார்.
“திலீபன் நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன் என்று தலைவர் தனக்குக் கூறியதாகக் குறிப்பிடும் செய்தி எம் நெஞ்சை உலுக்குவதாகும்.
உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த வரலாறுகள்.
உலக விடுதலை வரலாற்றில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த வரலாறுகள் வரலாற்றில் பதியப்பட்ட நிகழ்சிகள் ஆகும். சென்னைக்கு தமிழ்நாடு என்ற பெர் சூட்ட வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த வரலாற்றினைச் சங்கரலிங்கனார் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. அவர் மறைவை அடுத்து சென்னை இராச்சியத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. ஆந்திர நாடு உருவாக வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்து பொடிஇராமுலு அவர்கள் உயிர்நீத்த வரலாறும் அவர் உயிர் நீத்ததன் விளைவாக ஆந்திர மாநிலம் மலர்ந்ததையும் வராலாறு பதிவு செய்துள்ளது.
அயர்லாந்திலும் உண்ணா நோன்பிருந்து பொபி என்ற மாவீரன் உயிர்நீத்த வரலாறும் எம்மை உருக்கும் வரலாறு ஆகும். மேலே குறித்த இவர்களின் உயிர்நீத்த வரலாறுகள் எம் உள்ளத்தை உருக்குகின்றது. ஆனால் இவர்கள் உண்ணா நோன்பிருந்த போது நீர் அருந்தியதுண்டு.
அண்ணல் காந்தியும் தியாகி திலீபனும்
அண்ணல்காந்தியும் சாகும்வரை உண்ணா நோன்பை நோற்றதுண்டு. அந்த வரலாற்று நிகழ்ச்சியை மறுக்கவும் இல்லை. மறக்கவும் இல்லை .ஆனால் காந்தியடிகளின் நோன்புப் போராட்டம்அவரின் 40-50 வயதைத் தாண்டிய போராட்டம் ஆகும். அவர் உயிர் விடும் உண்ணா நோன்பை மேற் கொண்ட போதும் கூட தண்ணீருடன் உப்பைக் கலந்தே மேற்கொண்டார். ஆகவே அவர் உயிர் போகவில்லை. காலப் போக்கில் மக்களின் வேண்டுதலின் பேரில் அவருது உண்ணா நோன்பைக் கைவிட்டார்.ஆனால் திலீபனோ உப்புக் கலந்த நீரையோ அல்லது உப்பில்லா நீரையோ அருந்த மறுத்து 15 நாட்கள் கடுந்தவம் இருந்து உலகத்தை வியப்பில் ஆழ்த்தி காந்தியைத் தந்த இந்தியத் துணைக் கண்டத்தையே வெட்கித் தலை குனிய வைத்து தமிழ் கூறும் நல் உலகம் ஐயோ என்று அலற உடல் தமிழ் மண்ணிற்கும் உயிர் தமிழிற்கும் தமிழீழ மண்ணிற்கும் என்று கூறி செப் 26 1987ல் தன்னுயிரைத் துறந்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் எதுவும் உருப்படியாக ஈழத்தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்கவில்லை.
ஆனால் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை ஈழம் வாழ் தமிழ் மக்களின் அடிப்படையான தாயகம் என்பதை மட்டும் தமது முன்னுரையில் ஒத்துக் கொண்டது. ஆனால் நடைமுறையில் தமிழ் மக்களின் உயிர்ப் பிரச்சினை எதையும் தீர்த்துக் கொள்ள முன்வரவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகிய நிலையில் அடுத்தடுத்து பல சிக்கல்கள் ஈழத் தமிழ் மக்களை எதிர் நோக்கிய நிலையில் எப்படி ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலின் அடிப்படையிலேயே திலீபனின் உண்ணா நிலை நோன்பு அமைந்திருந்தது. அவர் விடுத்த கோரிக்கைகள் பின்வருபவை ஆகும்.
1 பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2 புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்.
3 வடகிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
4 இந்திய அமைதிப் படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப் பட்ட ஆயுதங்கள் திருப்பிப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள் பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றில் நிலை கொண்டுள்ள இராணுவ காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
5 தமிழ் ஈழ இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இவர் விடுத்த கோரிக்கைகள் ஏதோ நிறைவேற்ற முடியாத பெரும் கோரிக்கைகள் அல்ல. தன் கோரிக்கையில் தமிழ் ஈழத்தைப் பிரகடனம் செய் என்று கேட்கவில்லை. அன்றைய அரசியல் சூழ்நிலையை நினைவில் கொண்டு விட்டுக் கொடுத்த நிலையில் இக் கோரிக்கைகளை அவர் விடுத்தார். ஆனால் வெறி கொண்ட சிங்கள அரசோ அல்லது சிறிலங்காவுடன் ஒப்பந்தம் செய்த இந்திய அரசோநிறை வேற்ற மறுத்ததுதான் திலீபன் சாவுக்கு முழுக் காரணமாக அமைந்தது.என்பதை நாடுகள் நன்கறியும்.
அன்று இந்தியாவின் படைத்தளபதியாக விளங்கிய தீட்சித்திடம் திலீபனை காப்பாற்ற வேண்டும் எனத் தலைவர் பிரபாகரன் விடுத்த வேண்டுகோள் முற்றாக நிராகரிக்கப்பட்து. “இதுஎன் பொறுப்பல்ல” என்று ஆணவத்தோடு கூறியதன் விளைவுதான் எம் ஆருயிர் அனைய திலீபனை நாம் இழக்க நேரிட்டது. திலீபன் அவர்கள் இறப்பதற்கு முதல்நாள் தம் உறவுகளுடன் உரையாடிய நம் உள்ளம் உருக்கும் இறுதி உரை இதோ!
“என் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலை இருப்பதால் இருந்து கொண்டு பேசுகிறேன்.நாளை நான் சுயநினைவோடு இருப்பேனோ தெரியாது. அதனால்தான் நான் இன்று உங்களுடன் பேச விரும்பினேன்.நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கிறோம்.நாம் மனரீயாக’ ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என்பதை உணர்கிறேன். மகிழ்ச்சியுடன் பூரண திருப்தியுடனும் உங்களிடம் இருந்து இறுதி விடை பெறுகின்றேன். விடுதலைப்புலிகள் தமது உயிரினும் மேலாக சிறுவர்களைச் சகோதரிகளளை தாய்மார்களை தந்தையரை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம் எமது இலட்சியம். அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பம் இதுதான். மக்கள் புரட்சி வெடிக்கும் அதனை வானத்தில் இருந்து எனது நண்பர்களுடன் பார்ப்பேன் என்று திலீபன் ஆற்றிய இறுதி உரை வரலாற்றில் இடம்பெறும் வீர உரையாகும்.
தியாகி திலீபன் மறைந்து 34 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் அவரை எம்மால் என்றும் மறக்க முடியாத அளவுக்கு அவரின் தியாகம் அமைந்துள்ளது. செத்தும் வாழ்பவர் சிலர். வாழும் பொழுதே செத்தவர்கள் பலர். வாழும் போதே செத்தவர்கள் யார் என்பதைப் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. செத்தும் வாழும் சிலரில் தியாகி திலீபனுக்கு தனி இடம் உண்டு.
ஆகவேதான் தியாகி திலீபன் மறைந்த பொழுது எம் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எம்மை எல்லாம் அழ வைக்கின்ற முறையில்” திலீபன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா உலகம் இதை எண்ணிப் பார்க்குமா? இங்கு ஒரு தமிழ் ஈழம் பூக்குமா? என்று 1987 ல் கதறி அழுது எழுதிய கவிதை இது. 34 ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும் எமக்கு விடிவோ விடுதலையோ கிடைக்கவில்லை. மாறுபட்டு வேறுபட்டு கூறுபட்டுக் கிடக்கின்ற தமிழ் இனம் தனது வேறுபாடுகளை ஆழப் புதைத்து திலீபனின் பெயரில் நாம் தமிழீழத்தை அடைவோம் என உறுதி கொள்வோமாயின் உலகில் எந்த சக்தியும் எம்மைத் தடுக்க முடியாது. ஐநா மன்றத்தில் சுண்டைங்காய் நாடுகள்உட்பட 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. நாம் உறுதி பூணுவோமாயின் எம் புலிக்கொடி-எம் தாயின் மணிக்கொடி ஐநா மன்றத்தில் 193வது நாடாக பட்டொளி வீசிப் பறப்பது உறுதி.
மா .க ஈவேந்தன்.- CANADA