(1-10-2021)
இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து சுமார் 500 சைனைட் குப்பிகள் மற்றும் சைனைட் பவுடர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவருக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் சிறையில் இருந்த காலம் தண்டனைக் காலமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து சுமார் 500 சைனைட் குப்பிகள் மற்றும் சைனைட் பவுடர்களை இலங்கைக்கு கடத்த முயன்றபோது ராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸார் உச்சிப்புளியில் வைத்து கிருஷ்ணகுமார், சசிகுமார், ராஜேந்திரன், சுபாஸ்கரன் ஆகியோரை கைது செய்திருந்தனர்.
இதில் தப்பியோடிய குமரன் என்ற உதயகுமார் என்பவரை கன்னியாகுமரி மாவட்டத்தின் களியக்காவிளையில் வைத்து க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சந்தேகநபர் மீது இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை, போலியான பெயரில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் துவக்கியமை மற்றும் ஆதார் அட்டை வாங்கியமை, சிம் அட்டை வாங்கியமை என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவருகிறது.