(மன்னார் நிருபர்)
(01-10-2021)
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) காலை முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை பரிசீலிக்கப்பட்டது.
பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
-நாட்டில் கடந்த 41 நாட்களாக அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது.
-இந்த நிலையில் மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் பணியாளர்கள், பொதுப் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் பயணிகள், பணியாளர்கள் மற்றும் வாடகை போக்குவரத்தை மேற்கொள்ளும் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி பெற்றுக் கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய சுகாதாரத்துறையினரால் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எதிர்வரும் திங்கட்கிழமை வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
-எதிர் வரும் திங்கட் கிழமைக்கு பின்னர் தடுப்பூசி பெறாதவர்கள் ஆன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.