ஆதித்தன்
அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமெரிக்கா சென்ற ஸ்ரீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்ச, தனது பேத்தியை தூக்கி முத்தமிடுகின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருந்தது. பேரினவாதப் பேச்சும் இனவழிப்புப் போர் முழக்கமும் தான் கோத்தபாயவின் அடையாளங்கள் என்பதை இந்த உலகம் நன்கு அறியும். இந்த நிலையில் கோத்தாயவின் கரங்களில் எப்போதுமே இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழக் குழந்தைகளின் குருதி வழிந்தபடி இருப்பதைப் போலவே தோன்றும். இப்போது ஒரு குழந்தையை தூக்கி முத்தமிடுவது ஒரு அச்சம் தருகிற பதற்றமாகவே உள்ளது.
ஏன் அந்தப் பதற்றம்? ஏன் அந்த அச்சம்? இந்த உலகில் குழந்தைகளுக்கு மொழி இல்லை. குழந்தைகளுக்கு இனம் இல்லை. குழந்தைகளுக்கு குழந்தைகள் என்ற அடையாளத்தை தவிர ஏதுமே இல்லை. ஆனால் ஈழ இனப்படுகொலை யுத்தத்தில் குழந்தைகள் ஈழக் குழந்தைகள் என்பதற்காக எந்தவிதமான இரக்கமும் இல்லாமல் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் இறந்து கடந்த தாயின் காயப்பட்டு குருதி பிசுபிசுக்கும் மார்பில் பால் குடித்த குழந்தைகளும் உள்ளனர். தாயின் கருவறையிலேயே கொல்லப்பட்டு இறந்து கிடந்த சிசுக்களையும் பார்த்துள்ளோம். முள்ளிவாய்க்கால் நிலமெங்கும் கொல்லப்பட்டுக் கிடந்த குழந்தைகளின் காட்சியை உலகம் மறவாது.
வியட்னாமில் நடந்த போரில் தெற்கு வியட்னாம் வீசிய பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குழந்தைகளும் சிறுவர்களும் தாக்கப்பட்டனர். அவர்களின் ஆடைகளெங்கும் தீ பரவியது. கிம் ப்ஹுக் என்ற சிறுமி இராணுவ வீரர்களுக்கு நடுவே உயிரை காக்க அலறிக் கொண்டு ஓடிய காட்சியை புகைப்படக் கலைஞர் நிக்வுட் படமாக்கினார். வியட்னாம் போரின் கொடூரத்தை அச் சிறுமியின் ஓலக் குரம் நிரம்பிய முகம் உலகிற்கு எடுத்துக் காட்டியது. வியட்னாம்மீது கவனம் பெருகியது. அப்படியொரு பெருந்தாக்கத்தை அந்தப் புகைப்படம் ஏற்படுத்தியிருந்தது.
ஈழ இனப்படுகொலையின் போது அத்தகைய பல புகைப்படங்கள் வெளியில் வந்தன. இறந்து கிடக்கும் தாயில் பால் குடிக்கும் குழந்தையின் புகைப்படம் அதில் முக்கியமான ஆவணமாகும். ஈழம்மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போர் எவ்வளவு கொடுமையானது என்பதை அந்தப் புகைப்படம் உணர்த்துகிறது. அதைப் போல உடல் பாகங்கள் சிதைக்கப்பட்ட சனங்கள், செல்கள் கனால்களை கிழித்தபடி கிடக்கும் மக்களின் கோலங்கள் என பலவற்றையும் ஈழ இனப்படுகொலை போரில் ஊடகவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழக் குழந்தைகளின் குறியீடாக, பிரதிநிதியாக இருக்கும் பாலச்சந்திரன் பற்றிய புகைப்படமும் இந்த உலகை உலுக்கிய புகைப்படம் எனலாம். இறுதிப் போரில் சரணடைந்த பாலச்சந்திரன் இராணுவத்தின் காவலரணில் அமர்த்தப்பட்டுள்ளார். அவரின் கைகளில் பிஸ்கட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏக்கம் மிகுந்த விழிகளுடன் நடப்பதை அறியாது மிகுந்த அப்பாவித்தனமாக, குழந்தையுடன் அச் சிறுவன் பிஸ்கட்டை கடித்தபடி பார்க்கும் பார்வை இந்த உலகின் மனசாட்சியை உலுப்புகிறது.
இப்படி அமர்த்தப்பட்ட சிறுவன், பின்னர் நிலத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். அவன் நெஞ்சின் நான்கு பக்கமும் நான்கு துளைகள் காணப்படுகின்றன. அந்தப் பாலகனின் நெஞ்சில் இரும்புத் துப்பாக்கியை வைத்து இனப்படுகொலை இராணுவம் கொலை செய்திருக்கிறது. அந்த இனப்படுகொலையை உலகிற்கு எடுத்துரைக்க அப் படம் மிகச் சரியான ஆதாரம். அதனை பரிசோதித்து அதன் உண்மைத் தன்மையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் முன்னைய அறிக்கைகளில் பாலச்சந்திரன் படுகொலை பாரதூரமான போர்க்குற்றமாக குற்றம் சுமத்தப்பட்டது.
இன்றைக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் கைகளில் அவர் பேத்தியைப் பார்க்கின்ற போது எமக்கு பாலச்சந்திரனே நினைவுக்கு வருகிறார். இதேபோலொரு குழந்தையைத்தானே பிஸ்கட் கொடுத்து படுகொலை செய்ய உத்தரவிட்டார் கோத்தபாய ராஜபக்ச. உங்கள் கைகள் நடுங்காது. உங்கள் கைகளில் வழியும் குருதி அந்தக் குழந்தையை அச்சுறுத்தாதா? அந்தக் குழந்தை நிச்சயமாக பாலச்சந்திரன் படுகொலையை ஒருபோதும் ஏற்காது. நிச்சயமாக குருதி நிணம் வீசும் கோத்தபாயவைக் கண்டு அந்தக் குழந்தை முகத்தை திருப்பிக் கொள்ளும்.
உலகில் குழந்தைகளுடன் இனப்படுகொலை போர் புரிந்த நாடு ஸ்ரீலங்கா. ஈழக் குழந்தைகளை இனப்படுகொலை செய்த பட்டியல் என்பது மிக நீண்டது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாக இருந்தால் அந்த இனத்தின் குழந்தைகளை அழித்துவிடுகிற கருவிலேயே இனவழிப்பு என்ற திட்டத்தை கனகச்சிதமாக சிங்கள அரசு செய்திருக்கிறது. தாயின் கருவறை முதல், குழந்தைகள் பிறந்த மருத்துவமனை மாத்திரமின்றி குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களின்மீதும் குண்டுகளை கொட்டி அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
ஈழக் குழந்தைகள் தாம் தமிழர் என்று அறிவதற்கு முன்னரே, தாம் தமிழ் மொழி பேசுவற்கு முன்னரே அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பது எவ்வளவு கொடுமையான விசயம்? இப்போதும் ஈழ இனப்படுகொலைக்கான நீதியைக் கோரிக் கொண்டிருக்கிறது தமிழ் ஈழம். குழந்தைகளின் நலன், குழந்தைகளின் உரிமை எனப் பேசிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஈழக் குழந்தைகளின் உரிமைகள் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விசாரணை செய்ய முன்வரவேண்டும்.
குழந்தைகளின் விழிகளில் தெய்வத்தைக் காணலாம். குழந்தைகளை ஈர்க்காத மனிதர்கள் இல்லை. குழந்தைகள் என்றால் மனித குணமுள்ள எவரும் இரங்குவர். ஏதுமறியாத அப்பாவிக் குழந்தைகளை மிகக் கொடிய வழிமுறைகளின் ஊடாக இனவழிப்பு செய்த கோத்தபாய ராஜபக்சவின் இந்த போலிச் சிரிப்பும் போலிப் பாசமும் எதற்கானது?
கோத்தபாய ராஜபக்ச தனது பேத்தியை முத்தமிடுவது என்பது போலியானது. அது இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழக் குழந்தைகளின் இபடுகொலையை மூடி மறைக்கின்ற செயல். ஆயிரம் குழந்தைகளை கொன்ற அரக்கனாக இருக்கும் கோத்தபாய சிங்களக் குழந்தையை மாத்திரமல்ல, உலகின் எந்தக் குழந்தையையும் தொட அருகதையற்றவர். ஈழக் குழந்தைகள்மீதான இனவழிப்புக்கான நீதி என்பது சிங்களக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பைத் தரும். உலகின் எல்லாக் குழந்தைகளுக்குமான நீதியைப் பாதுகாப்பைத் தரும் என்பதே உண்மை.