(18-10-2021)
போராட்டம் நடத்தி கூட்டமைப்பினர் குளிர் காய முயல்வது நகைப்புக்குரிய விடயம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றும், இன்றும் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்கள் மத்தியில் பெரியளவில் எடுபடவில்லை. அந்த ஆர்ப்பாட்டங்களில் காணப்படும் மக்களின் பங்களிப்பை வைத்து அதனை அறிய முடிகிறது.
இது அவர்களது குறும்திரைப்படம் என்றே சொல்ல வேண்டும். அன்று வயலுக்குள் இறங்கி நீச்சலடிப்பதும், மாட்டு வண்டி ஓடுவதும் என எமது புகைப்பட கலைஞர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இருந்தது.
அதேபோல் நேற்று கடலுக்குள்ளும் இறங்கியுள்ளார்கள். இன்று கூட வவுனியாவில் ஆர்ப்பாட்டம் பிசு பிசுத்தது என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு சில நபர்களுடன் நடந்தது.
அரசாங்கத்தால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது ஒரு சில கசப்பான விடயங்களும் இருக்கும். அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் போராட்டம் நடத்தி கூட்டமைப்பினர் குளிர் காய முனைவது நகைப்புக்குரிய விடயம் எனத் தெரிவித்தார்.