(மன்னார் நிருபர்)
(20-11-2021)
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு 15 நாட்களை கடந்த நிலையில் பல பகுதிகளில் தேங்கியுள்ள மழை வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பேசாலை பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ள மையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் தொற்று நோய்களும் பரவும் அபாயம் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஹாஜிர் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் மழை நீர் வெளியேறுவதற்கான தற்காலிக ஏற்பாட்டை மன்னார் பிரதேச சபை தவிசாளர் மேற்கொண்டுள்ளார்.
மேலும் வெள்ளப் பாதிப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு மன்னார் பிரதேச சபை தவிசாளர் உடனடியாக விஜயம் மேற்கொண்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வெள்ளப்பாதிப்பு காணப்படும் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர் தற்காலிகமாக வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது டன் வீதியையும் சீரமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
அதே நேரம் மன்னார் பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தற்காலிகமாக வடிந்தோடுவதற்கான வடிகால் அமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது டன் மழை நீர் கடலுடன் கலப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.