(மன்னார் நிருபர்)
(11-12-2021)
மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்றைய தினம் (11) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நோக்கி பயணிகளுடன் செல்ல வேண்டிய இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான வவுனியா சாலை பேருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மன்னார் சாலையில் இருந்து மாலை 3.30 மணிக்கு வவுனியா நோக்கி சென்றுள்ளது.
இதனால் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மன்னார் சாலையில் இருந்து வவுனியாவிற்கு அரச பேருந்தில் செல்ல காத்திருந்த பயணிகள் குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக அரச போக்குவரத்திற்கான பருவ கால சீட்டை பயன்படுத்தி போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருகின்ற அரச உத்தியோகத்தர்கள் பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்தும் தாம் இவ்வாறன பல நெருக்கடிகளுக்கும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயணிகள் விசனம் தெரிவித்து ள்ளனர்.
இன்றைய தினம்(11) இலங்கை அரச போக்குவரத்து சேவைக்கான மன்னார்சாலை பேருந்து குறித்த நேரத்திற்கு பயணம் செய்யாது முன் கூட்டியே சென்றமை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் பய ணிகள் வினவி யபோது நேரக் கணிப்பாளர் அல்லது முகாமையாளர் என்று அங்கிருந்தவர்கள் அசமந்த போக்காக பதில்களை கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக மன்னார் சாலையில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான பேருந்துகளின் அசமந்த போக்கான செயல் பாடுகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட மாகாணத்திற்கான உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இச் செய்தி எழுதும் வரை மன்னார் சாலையில் இருந்து வவுனியா நோக்கி பயணங்களை மேற்கொள்ள இருந்த பயணிகள் மற்றும் அரச அதிகாரிகள் உரிய பேருந்துகளில் இன்றி இன்றைய தினம்(11) மாலை 5.50 மணிக்கு வவுனியா நோக்கி செல்லும் தனியார் பேருந்துக்காக காத்திருந்து பயணங்களை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
























