(22-12-2201)
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணி பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
ஆரையம்பதி யைச் சேர்ந்த குறித்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக காணி பத்திரம் தொடர்பாக ஆசிரியர்கள் உட்பட பலரிடம் இலஞ்சம் வாங்கி வந்துள்ளதாகவும், இந்த நிலையில் ஒருவருக்கு அரச காணி ஒன்றை பெற்று தருவதாக ஒருவரிடம் 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் முறையிட்டதையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான இன்று பகல் செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் வைத்து அவர் கேட்ட 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கொடுத்த போது அங்கு இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் குறித்த உத்தியோகத்தரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.